
posted 29th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சிகையலங்காரத்தில் மாணவர்களது சீரான ஒழுங்குமுறை
மாணவர்களது சிகையலங்காரத்தில் சீரான ஒழுங்குமுறையை பேணுதல் தொடர்பான விசேட கூட்டமொன்று திருக்கோவில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில், பாடசாலை மாணவர்களுக்கான சிகையலங்காரமானது பாடசாலை சட்ட திட்டங்களுக்கு அமைவானமுறையில் ஒழுக்கமானதாக சகல சிகை அலங்கார நிலையங்களிலும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கை சிகை அலங்கார நிலைய உரிமையாளர் சங்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அதனை நேற்று முன் தினம் (26) முதல் திருக்கோவில் கல்வி வலயப் பிரதேசத்தில் முழுமையாக அமுலாக்குவதென தீர்மானிக்கப்பட்டு தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரனின் தலைமையில் தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகளை சீரமைத்தலும் அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தல் மற்றும் மாணவர்களின் ஒழுக்கம் தொடர்பான விசேட கலந்துரையாடல் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில்,
அறநெறிப் பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தல், மாலை நேரங்களில் மைதானங்களில் மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடும் கலாச்சாரத்தை ஏற்படுத்துதல், வெள்ளிக்கிழமை மாலை நேரங்களில் ஆலயங்களுக்கு மாணவர்கள் செல்வதை ஊக்குவித்தல், திருக்கோவில் கல்வி வலயத்திற்குட்பட்ட தரம் - 9 மற்றும் அதற்குட்பட்ட தரங்களை சேர்ந்த மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வெள்ளிக் கிழமைகளில் மாலை 4.00க்கு பின்னரும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு நாளும் வகுப்புக்களை நடத்துவதில்லை எனும் தீர்மானம் ஏகமனதாக எடுக்கப்பட்டது.
இத்தீர்மானம் தனியார் கல்வி நிலைய ஒன்றியத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா. உதயகுமார், திருக்கோவில் பிரதேச செயலாளர் த. கஜேந்திரன், ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வி. பபாகரன் ஆகியோரது இணைத்தலைமையில் இந்தக் கூட்டம் திருக்கோவில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், மதத்தலைவர்கள், திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ப. மோகனகாந்தன், திருக்கோவில் பொது சுகாதார பரிசோதகர், பாடசாலை அதிபர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர், திருக்கோவில் வலயக்கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், சிகைஅலங்கார நிலைய உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)