
posted 13th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி போராட்டம்
விவசாயிகளின் சமகாலப் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு கோரி அம்பாறை, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச விவசாய அமைப்புக்கள் இணைந்து மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்தன.
அக்கரைப்பற்று மணிக்கூட்டுக் கோபுரம் முன்பாக ஒன்றிணைந்து பல்வேறு சுலோக அட்டைகளை தாங்கி தமது எதிர்ப்பை வெளிப்படுத்திய விவசாயிகள், பேரணியாக அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியூடாக சின்னப்பள்ளி வரை சென்று அங்கிருந்து ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் வரை சென்றனர்.
பிரதேச செயலகம் முன்பாக தமது எதிர்ப்பை வெளியிட்ட விவசாயிகள் அங்கு வருகை தந்த அம்பாறை மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் த. கலையரசனிடமும் உதவிப் பிரதேச செயலாளர் ஆர். சுபாகரிடமும் கோரிக்கைகள் அடங்கிய மகஜர்களையும் கையளித்தனர்.
சிறுபோக அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில் நெற்செய்கைக்கான உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதுடன் விளைச்சல் குறைவடைந்தமையினால் தாம் பெரும் நட்டத்திற்குள்ளாகியுள்ளதாக அவர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் அரசினால் வழங்கப்பட்ட மானியப் பணமும் பணமாக வழங்கப்படாமல் வவுச்சர் மூலமாக வழங்கப்பட்டு கண்துடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.
நெல்லின் உத்தரவாத கொள்வனவு விலையை கிலோ ஒன்றுக்கு 100 ரூபா வரையும் காய்ந்த ஈரப்பதனற்ற நெல்லை 120 ரூபாவரையும் அதிகரித்து விவசாயிகளின் முழு உற்பத்தியையும் அரசு நெற்சந்தைப்படுத்தும் அதிகார சபை மூலம் கொள்வனவு செய்யவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேநேரம் தனியாரும் உத்தரவாத விலைக்கே நெல்லை கொள்வனவு செய்யவேண்டும் எனவும் மானியப் பணத்தை பணமாக வழங்கவும் அல்லது விவசாயிகள் விரும்பும் உரத்தை கொள்வனவு செய்ய அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்காலத்தில் பெரும்போகச் செய்கையில் விவசாயிகள் ஈடுபடுவதானால் உரம், களைநாசினி, பூச்சிநாசினி, போன்றவற்றின் விலையினை குறைத்து உறுதிப்படுத்த வேண்டும் எனவும் அரிசி இறக்குமதியை நிறுத்தி நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை காப்பாற்றுமாறும் அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)