
posted 2nd July 2023
உறவுகளின் துயர் பகிர - சிரம் நெகிழ்ந்து வரவேற்கும் இணையத்தளம்
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இப்படியும் ஒரு கிராமம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற முருகன் ஆலயத்திற்கு அருகாமையில் அமைந்திருக்கின்றது அந்த கிராமம்.
கல்லரிப்பு என்பது அக் கிராமத்தின் பெயர். அந்த கிராமத்தில் ஆக 41 குடும்பங்களைச் சேர்ந்த தமிழ் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். அவர்கள் கடந்த காலங்களிலே தமது குடிதண்ணீர் மற்றும் தேவைகளுக்காக ஆற்றிலும் ஓடையிலும் தங்கியிருந்தார்கள்.
குடிதண்ணீர் பிரச்சினை பற்றி அவர்கள் கூறியதாவது;
சுத்தமான நீர் எடுக்க வேண்டுமாக இருந்தால் சுமார் 2 கிலோ மீற்றர் தூரம் நடந்து அதனைப் பெறவேண்டிய தேவையுள்ளது.
நாளடைவில் பிரதேச சபையூடாக குடிதண்ணீர் வழங்கப்பட்டு வந்துள்ளது . அதுவும் சில நேரங்களில தாமதமாகித்தான் கிடைக்கும்.
அவ் வேளைகளில் ஆற்றில் இருந்து நீரை பெறுவோம். எமது ஊரில் பாடசாலை இல்லை.
மாணவர்கள் சீருடைகளை இங்கு கழுவினால் பழுப்பு நிறத்தில் காணப்படும். அருகிலுள்ள பாடசாலைக்குச் செல்லும் எமது மாணவர்களுக்கு அது சிரமம். ஆசிரியர்கள் சிலவேளைகளில் இந்த நிறம் பற்றி கேள்விகள் கேட்பதுண்டு. இந் நிலையில் இங்கு குடிதண்ணீர் திட்டம் ஒன்றை மேற்கொள்ள வெளிநாட்டு உதவியோடு அரச சார்பற்ற நிறுவனமொன்று முன்வந்தது.
இந்த குடிதண்ணீர் திட்டம் 31-3-2023 இல் ஆரம்பிக்கப்பட்டது.
ஆற்றில் இருந்து நீரை பெற்று சுத்திகரிப்புச் செய்து அதனை வழங்குவதற்காக மின்சாரச் செலவுக்காக மாதம் 100 ரூபாய் வழங்குமாறு மக்களிடம் கோரப்பட்டது. மக்களும் மகிழ்ச்சியில் அந்த நூறு ரூபாய் வழங்கினார்கள். ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரே ஒரு மாதம் வரைதான் நீடித்தது. ஒருமாதமே குடிதண்ணீர் கிடைத்தது. அதுவும் எதிர்பார்த்த சுத்தமான நீர் இல்லை.
அதனைக்கூட ஏப்ரல் மாதம் மாத்திரமே அதனை வழங்கியிருந்தார்கள். அதன் பின்பு குடிதண்ணீர் வழங்கப்படவில்லை.
தற்போது இக் குடிதண்ணீர்த் திட்டமும் நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது நாங்கள் குடிதண்ணீருக்காக வெகு தூரம் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. இந் நிலையில் மக்கள் வெகுண்டெழுந்து அந்த குடிதண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்தை நிறுவிய ஒப்பந்தக்காரரிடம் கேட்ட பொழுது அதற்குரிய இரசாயன திரவம் ஒன்று வரும். அது வருகின்ற பொழுது குடிதண்ணீர் தருவோம் என்று கையை விரித்துவிட்டார்.
அதனால் குடிதண்ணீருக்காக அல்லாடவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றார்.
தற்பொழுது அந்த மக்கள் குடிதண்ணீருக்காக மீண்டும் மீண்டும் தொலைதூரம் பயணிக்கவேண்டி இருக்கின்றது .
இதனை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் கவனிக்கவேண்டும் என்று அந்த மக்கள் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)