
posted 28th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

சனசமூக நிலையப் பூங்கன்றுகளுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விசமிகள்
எஸ் தில்லைநாதன்
அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியிலுள்ள சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பன்னங்கண்டியில் அறுவடை விழா
எஸ் தில்லைநாதன்
கிளிநொச்சி மாவட்டத்தின் பிரதான நீர் வழங்கும் குளங்களில் ஒன்றான இரணைமடு குளத்தின் கீழ் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அதற்கான அறுவடை விழா நேற்று முன்தினம் (26) இரணைமடு கமக்கார அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் பன்னங்கண்டிப் பகுதியில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் மற்றும் விவசாயத் திணைக்கள உத்தியோகத்தர்கள், நீர்பாசனத் திணைக்கள உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி கமநலசேவை நிலையத்தின் பெரும்பாக உத்தியோகத்தர்கள், கமக்கார அமைப்புகள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

குளத்தில் மூழ்கி மரணம்
(ஏ.எல்.எம்.சலீம்)
கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில் ஆலய வழிபாட்டுக்கு சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எருவில் களுவாஞ்சிகுடி பிரதேசத்தைச் சேர்ந்த மோகன் கதீஸ் (வயது-19) என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்தவராவார்.
சம்பவ தினத்தன்று தனது வீட்டிலிருந்து தாந்தாமலை ஆலயத்துக்கு வழிபாட்டிற்காக சென்று ஆலயத்தின் அருகில் உள்ள குளத்தில் நண்பர்களுடன் நீராடிக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கியுள்ளார். இதனை அவதானித்த நண்பர்கள் அவரை மீட்டெடுத்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதித்தபோதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்போது தெரியவந்தது.
சம்பவ இடத்திற்கு சென்ற மண்டூர் பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி தம்பிப்பிள்ளை தவக்குமார் சடலத்தை பார்வையிட்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்தும்படி சட்ட வைத்திய அதிகாரிக்கு பரிந்துரைத்தார். விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
பிரார்த்தனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு!
எஸ் தில்லைநாதன்
வீட்டில் பூஜை அறையில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த வயோதிபர் ஒருவர் மயங்கி விழுந்து மரணம் அடைந்த சம்பவம் யாழ்ப்பாணம் - வடமராட்சியில் இடம்பெற்றுள்ளது.
வடமராட்சி - ஊறணி பகுதியைச் சேர்ந்த செல்வராசா செல்வமனோகரன் (வயது- 67) என்பவர் நேற்று (27) தினம் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 5.30 மணியளவில் வீட்டு பூஜை அறையில் பிரார்த்தனை ஈடுபட்டிருந்தபோது அவர் மயங்கி சரிந்து விழுந்துள்ளார். அவரைப் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியரால் தெரிவிக்கப்பட்டது.
பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தம் சிவராஜா இம்மரணம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உடற்கூற்று பரிசோதனைக்கு உத்தரவிட்டார்.
உடற் கூற்று பரிசோதனையில் மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் அவரின் உடற்கூற்று மாதிரிகள் இரசாயனப் பகுப்பாய்விற்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பட்டாசு வெடித்ததால் பற்றியெரிந்த வல்லை
எஸ் தில்லைநாதன்
அச்சுவேலி வல்லை இந்து மயான களப்பு பகுதியில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அச்சுவேலி பகுதியில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற மரண சடங்கின் இறுதி ஊர்வலத்தின்போது இளைஞர்களினால் வீசப்பட்ட பட்டாசு வெடி புற்தரவையில் விழுந்து தீப்பற்றிக் கொண்டது.
இதனால் குறித்த பகுதியின் பெரும்பாலான பற்றைக் காடுகள் தீயில் கருகி நாசமாகின.
இது தொடர்பில் பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய பிரதேச சபை பணியாளர்கள் மூலம் தீப்பரவல் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.

வல்வெட்டித்துறையில் 5 முதலைகள் பிடிபட்டன
எஸ் தில்லைநாதன்
வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று (27) 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்ட காலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன.
ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

திடீரென யாழ். வந்தார் புத்தசாசன அமைச்சர்!
எஸ் தில்லைநாதன்
புத்தசாசன, மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க யாழ்ப்பாணத்துக்கு தீடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
கடற்படையின் விசேட படகு மூலம் நெடுந்தீவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்பதற்காக அமைச்சர் வருகை தந்தார் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின்போது நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற பாடசாலை நூலக அபிவிருத்தி மற்றும் மொழி இலக்கிய கலை மேம்பாட்டுத்திட்டத்தை அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணத்தில் மேலும் சில நிகழ்வுகளில் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆனைக்கோட்டைப் பிரதேசத்தில் திருச் சொரூபங்கள் மீது தாக்குதல்!
எஸ்தில்லைநாதன்
யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை பகுதிகளில் உள்ள 06 இற்கும் மேற்பட்ட கிறிஸ்தவ திருச் சொரூபங்கள் மீது இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடத்திச் சேதம் ஏற்படுத்தியுள்ளன.
ஆனைக்கோட்டைப் பகுதியில் வீடுகளுக்கு முன்னால் உள்ள திருச்சொரூபங்கள் மீது இன்று (28) வெள்ளிக்கிழமை அதிகாலைவேளை இனம் தெரியாத கும்பல்கள் தாக்குதல் நடத்தியுள்ளன.
அதில் 2 இடங்களில் சொரூபங்களின் தலைகள் உட்பட சொரூபங்கள் முழுமையாகச் சேதமாக்கப்பட்டுள்ளன. மேலும் இரண்டு இடங்களில் சொரூபங்கள் பகுதிகளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. மற்றைய இடங்களில் சொரூபங்கள் வைத்திருந்த கண்ணாடிக் கூடுகள் சேதமாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

எஸ் தில்லைநாதன்
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் இன்று (28) வெள்ளி காலை 9.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சார்ள்ஸ் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், பொலிஸார் என பலரும் கலந்துகொண்டனர்.
சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிய யாழ்.பெண் சென்னையில் மரணம்!
எஸ் தில்லைநாதன்
யாழ்ப்பாணத்திற்கு வருவதற்காக சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்குச் சென்றிருந்த பெண் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவருடைய பெயர் சிவசுகந்தி (வயது 43) என்று விமான நிலையத் தகவல்கள் தெரிவித்தன. யாழ்ப்பாணத்திலிருந்து சுற்றுலா சென்று திரும்பும்போதே அவர் உயிரிழந்திருப்பதாகவும் அவர் திருமணமாகாதவர் என்றும் முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண்ணின் சடலம் விமான நிலையப் பொலிஸாரின் உதவியுடன் நோயாளர் காவுவண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
மேலதிக விசாரணைகளை விமான நிலையப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
காணி சுவீகரிப்பு கைவிடப்பட்டுள்ளது
எஸ் தில்லைநாதன்
5-வது நாளாகவும் கடற்படையினருக்கான காணி சுவீகரிப்பு முயற்சி; பொதுமக்களின் எதிர்ப்பால் கைவிடப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட வெற்றிலைக்கேணி பகுதியில் தனியாருக்கு சொந்தமான காணிை இலங்கை கடற்படையினருக்கு நிரந்தரமாகவே சுவீகரிக்கும் நோக்குடன் தொடர்ந்து 5 வது நாளாக இன்று (28) காணி அளவீட்டு முயற்சி இடம்பெற்றவேளை மக்க்ள் காட்டிய எதிர்ப்பால் காணி அளவீடு நிறுத்தப்பட்டுள்ளது.
வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணியை சேர்ந்த தனியாருக்குச் சொந்தமான 15 பேர்ச் (ஒன்றரை பரப்பு) காணியே இவ்வாறு அளவீடு செயவயும் நடவடிக்கை மேற்க்கொள்ளப்படவிருந்தது.
இதன்போது பிரதேச மக்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வராஜா கஜேந்திரன் , எம் ஏ சுமந்திரன் ,காணி உரிமைக்கான மக்கள்ணியக்க பிரதிநிதி இரத்தினசிங்கம் முரளீதரன், வடமராட்சி கிழக்கி மக்கள் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் செல்வன் உள்ளிட்ட பலர் பங்கேற்றிருந்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)