
posted 21st July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி
முல்லைத்தீவு மாவட்டம், கொக்கிளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்திடம் மதிப்பீட்டறிக்கை கோரப்பட்டிருந்த நிலையில் நேற்று (20) வியாழன் நடந்த கலந்துரையாடலில் திணைக்களத்தினர் பங்கேற்கவில்லை என்பதுடன் மதிப்பீட்டறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை.
கொக்குத்தொடுவாயில் தண்ணீர்குழாய் புதைப்பதற்கு வீதிக்கரையில் மண்ணை கடந்த ஜூன் 29ஆம் திகதி தோண்டியபோது எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதையடுத்து அங்கு கடந்த 6ஆம் திகதி புதைகுழி அகழ்வு முன்னெடுக்கப்பட்டது. இதன்போதும் மேலும் பல எலும்புகள் மீட்கப்பட்டிருந்தன. இதன் அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வதற்காக முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் கடந்த 13ஆம் திகதி கலந்துரையாடல் நடத்தப்பட்டிருந்தது. இந்தக் கலந்துரையாடலில் அகழ்வுப் பணிகளை தொல்பொருள் திணைக்களம் ஊடாக முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதற்குரிய உத்தேச மதிப்பீட்டறிக்கையை சமர்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியான கலந்துரையாடல் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் நேற்று முன் தினம் நடைபெற்றது. சட்டத்தரணிகள், பொலிஸார், சட்டமருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர்.
தொல்பொருள் திணைக்களத்தினர் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்கவில்லை. அத்துடன் மதிப்பீட்டு அறிக்கையும் சமர்ப்பிக்கவில்லை. இந்தநிலையில் புதைகுழி அகழ்வுகளை மேற்கொள்வதற்காக களனி பல்கலைக்கழக பட்டப்பின் படிப்புக்கள் பீடத்தின் தலைவர் ராஜ் சோமதேவ மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேராசிரியர் புஸ்பரட்ணம் ஆகியோர் ஊடாக நேரடி ஆய்வுக் கூட்டறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளுக்குரிய நிதி மூலம் இதுவரை கண்டுபிடிக்கப்படாத நிலையில் அது தொடர்பில் ஆராயப்பட்டு வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட செயலகத்துக்கு இது தொடர்பான கோரிக்கை முன்வைக்கப்பட்டு அது ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் நிதி மூலம் தொடர்பில் கண்டறிவதற்கும் அடுத்த கட்டம் தொடர்பில் ஆராய்வதற்கும் அடுத்த மாதம் 8ஆம் திகதி மீண்டும் கலந்துரையாடல் நடத்தப்படவுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)