
posted 11th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

கல்முனையில்
பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவின் உரையைக் கண்டித்து
கல்முனை நீதிமன்றங்களில் பணியாற்றும் சட்டத்தரணிகள் இன்று செவ்வாய்க்கிழமை (11) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டதுடன் ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.
கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில் அதன் தலைவர் எம்.ஐ. றைசுல் ஹாதி தலைமையில் நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
முல்லைத்தீவு, குருந்தூர்மலையில் தமிழ் பௌத்த வழிபாட்டு எச்சங்களின் மீது, சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள சிங்கள பௌத்த கட்டுமானங்களை பார்வையிட முல்லைத்தீவு நீதிபதி ரி. சரவணராஜா சென்றிருந்தவேளை தனது குழுவினருடன் அங்கு வந்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர இடையூறு விளைவிக்க முற்பட்டதையடுத்து, நீதிபதியினால் அவர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டிருந்தார்.

இதன் பின்னர் சரத் வீரசேகர எம்.பி. பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் பேசியிருந்தார்.
இதனைக் கண்டித்தே கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தினால் பணிப்பகிஷ்கரிப்பும் ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பில்
நீதித்துறையை அவமதிக்கும் வகையில், தனது பாராளுமன்ற சிறப்புரிமையைப் பயன்படுத்தி கருத்துக்களை வெளியிட்ட, பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகரவுக்கு எதிராக மட்டக்களப்பு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கமும் தமது கண்டனங்களைப் பதிவு செய்தது.
நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகிய சட்டத்தரணிகள், இன்று காலை மட்டக்களப்பு நீதிமன்ற கட்டடத்துக்கு முன்பாக ஒன்றுகூடி அமைதியான முறையில் தமது கண்டனங்களை பதிவு செய்தனர்.
இனவாதத்தைத் தூண்டாதே, நீதித்துறையை அச்சுறுத்தாதே போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் சட்டத்தரணிகள் தாங்கியிருந்தனர்.
மட்டக்களப்பு சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி பே.பிரேம்நாத் தலைமையில் இந்த அமைதி வழி ஆர்ப்பாட்டம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, அம்பாறை கல்முனை சட்டத்தரணிகள் சங்க தலைவர் எம். ஐ.றைசுல் ஹாதி தலைமையில், கிழக்கு மாகாண மேல்நீதிமன்றத்திற்கு முன்பாகவும் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சட்டத்தரணிகள் நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகி,தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.
பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்தி, நீதித்துறையிலுள்ள தமிழர்களுக்கு மிரட்டல் விடுக்கும் பாணியில் பேசிய சரத் வீரசேகரவுக்கு எதிராக பதாதைகளையும் போராட்டத்தில் கலந்துகொண்ட மூத்த மற்றும் இளம் சட்டத்தரணிகள் தாங்கியிருந்தனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)