
posted 11th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
கிறைம் செய்திகள்
இளைஞன் சுட்டுக் கொலை
உறங்கிக் கொண்டிருந்த இளைஞரை இடியன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு கொலையாளிகள் தப்பிச் சென்றுள்ளனர்.
முல்லைத்தீவு - மல்லாவி - பாலிநகரில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த மகேந்திரன் டிலக்சன் (வயது 23) என்பவர் உயிரிழந்தார்.
அன்றைய தினம் நடந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றதாகவும் இதன் தொடர்ச்சியாகவே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதா என்ற கோணத்தில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டில் இளைஞர் படுகாயமடைந்த நிலையில் குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற நிலையில் வழியிலேயே உயிரிழந்தார்.
இதேநேரம் நேற்று முன்தினம் ஞாயிறுமாலை பாலி நகர் பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் படுகாயமடைந்த இருவர் மல்லாவி ஆதார மருத்துவமனை, கிளிநொச்சி பொது மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் பின்னணியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் தெரிவிக்கப்பட்டது. மல்லாவி பொலிஸார் விசாரணைகளை தொடர்ந்து வருகின்றனர்.
குத்திக் கொல்லப்பட்ட உறவினன்
உறவினர்கள் இடையே ஏற்பட்ட தகராறு கத்திக் குத்தில் முடிந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்தார்.
பண்டத்தரிப்பு - பிரான்பற்று - முருகன் கோயிலுக்கு அண்மையாக நேற்று திங்கட்கிழமை நள்ளிரவு 12.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதில், இராமச்சந்திரன் ராஜ்குமார் (வயது 35) என்ற நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உறவினர்கள் மூவர் இடையே முரண்பாடு ஏற்பட்ட நிலையில் இருவர் சேர்ந்து குடும்பஸ்தரை கத்தியால் குத்தினர். இதில், படுகாயமடைந்த அவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
ஆனால், நேற்று திங்கட்கிழமை காலை சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.
இளவாலை பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்துள்ளனர்.
சடலம் உடல்கூற்றுப் பகுப்பாய்வுக்காக யாழ். போதனா மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)