
posted 12th July 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்

த. தே. கூ. பா. உ. ஜனாவுக்கும் ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரித்தானிய கிளை உறுப்பினர்களுக்குமிடையில் கலந்துரையாடல்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான, கோவிந்தன் கருணாகரம் ( ஜனா ) தலைமையில் ரெலோ, புளொட், மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எவ் இன் பிரித்தானிய கிளையின் நிர்வாக உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் இடம் பெற்றது.
லண்டன் ஹரோவில் அமைந்துள்ள கலந்துரையாடல் மண்டபம் ஒன்றில் ஞாயிறு (09.07.23) அன்று சுமார் இரண்டுமணி நேர ஆக்கபூர்வமான கலந்துரையாடல் ஒன்று இடம் பெற்றது.
இந் நிகழ்வானது இலங்கையில் இருந்து வருகை தந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய அமைப்பாளருமான கோவிந்தன் கருணாகரம் ( ஜனா) தலைமை தாங்க தமிழீழ விடுதலை இயக்கம் பிரித்தானிய கிளை சார்பாக சாம், ரூபன் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் பிரித்தானிய கிளை சார்பாக சிவபாலன், அல்வின், முகுந்தன், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி சார்பாக பிரபு, பரமேஸ், சஜீ அவர்களும் கலந்து கொண்டனர்.
இக் கலந்துரையாடலானது ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமானது. தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அவர்களால் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து தமிழரசு கட்சி வெளியேறிய பின் மீண்டும், புதிதாகவும் இணைந்த கட்சிகளுடன் உருவான புதிய கூட்டின் இன்றைய கள நிலவரங்கள், யாப்பு, நிர்வாக கட்டமைப்பு, எதிர்கால வேலைத் திட்டங்கள், புலம்பெயர் நாடுகளில் ஆற்ற வேண்டிய வேலைத் திட்டங்கள், அடுத்த ஆண்டில் சந்திக்க போகும் தேர்தல்கள், தலைமை காரியாலயம் தொடர்பான விடயங்கள், மற்றும் நிதி தொடர்பான விடயங்கள் என பல விடயங்கள் தெரிவிக்கபட்டன.
அவற்றை உள்வாங்கிய உறுப்பினர்கள் அதற்கான தமது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் தமது கேள்விகளையும் முன் வைத்து பதில்களையும் ஏற்றுக்கொண்டனர்.
இக் கூட்டத்தில் பங்கு பற்றிய உறுப்பினர்களே பிரித்தானியாவின் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிர்வாக குழு உறுப்பினர்கள் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் உறுப்பினர்கள் வருகை தராததால் அடுத்த கூட்டத்தில் அவர்களையும் உள் வாங்கி நிர்வாக கட்டமைப்பை தெரிவு செய்தல் என்ற முடிவு எக மனதாக ஏற்றுக கொள்ளப்பட்டு மிகவும் பெறுமதி வாய்ந்த கலந்துரையாடலாக நிறைவேறியது.
இக் கலந்துரையாடலுக்கு வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர் ஜனா அவர்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரித்தானிய கிளை சார்பாக மனமார்ந்த நன்றிகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)