விவசாயிகளுக்கு ஐ.ஓ.சி டீசல் விநியோகம்

மட்டக்களப்பு நகர் பகுதியிலுள்ள ஐ.ஓ.சி எரிபொருள் நிறுவனத்தினூடாக நேற்று விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கி டீசல் விநியோகம் இடம்பெற்றுள்ளது.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள இறுக்கமானக சூழ்நிலையில் எரிபொருளை பெற்றிக்கொள்வதில் அனைத்துத் தரப்பினரும் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுபோக வேளாண்மை இம்முறை 80 ஆயிரம் ஏக்கரில் நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கடந்த 20 நாட்களாக அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அறுவடை செய்ய பயன்படுத்தும் இயந்திரங்களுக்கான டீசல் சீரான முறையில் கிடைக்கப்பெறாதமையினால் 20 நாட்கள் கடந்த நிலையில் பல ஏக்கர் விவசாய நிலங்களை காட்டு யானைகளிடம் இருந்து காத்துக்கொள்வதில் விவசாயிகள் சிரமத்தை எதிர்கொள்வது மட்டுமன்றி, அறுவடைக்கான காலம் தாமதமாகியுள்ளமையினால் நெற்கதிர்கள் உதிர்ந்து சேதமடைந்து வருகின்றன.

வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் உள்ள முருக்கன்தீவு கண்டத்தில் செய்கை பண்ணப்பட்டுள்ள 200 ஏக்கருக்கான 3000 லீற்றர் எரிபொருளே நேற்று முன்னுரிமையடிப்படையில் விவசாயிகளுக்கு குறித்த எரிபொருள் நிலையத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ளது.

அதேவேளை, நேற்று குறித்த எரிபொருள் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள 6600 லீற்றர் டீசலில் 3000 லீற்றர் டீசல் அறுவடைக்கு தயாராக உள்ள விவசாயிகளுக்கும், இலங்கை அஞ்சல் சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கும், மேலும் பல அரச திணைக்களங்களின் வாகனங்கள் உள்ளிட்ட, நோயாளர் காவு வண்டிகளுக்கும் வழங்கப்பட்டது.

குறித்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரான சமூக சேவையாளர் முத்துக்குமார் செல்வராசாவுக்கு குறித்த எரிபொருள் நிலையத்துக்கு வருகை தந்து எரிபொருளினை பெற்றுக்கொண்ட விவசாயிகள் தமது பாராட்டையும், நன்றியையும் தெரிவித்தனர்.

விவசாயிகளுக்கு ஐ.ஓ.சி டீசல் விநியோகம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)