
posted 1st July 2022
இலங்கை அரசாங்கத்தின் அறிவுறுத்தலுக்கு இணங்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று முன் தினம் புதன்கிழமை எரிபொருள் விநியோகத்தை முப்படை, பொலிஸ் மற்றும் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு வழங்கத் தீர்மானித்துள்ளது.
இந்த சமீபத்திய நடவடிக்கை தொடர்பாக பாதுகாப்புப் படையினருக்கு விளக்கமளித்ததாகவும், இந்த முறை இன்று வெள்ளிக்கிழமை முதல் நடைமுறைக்கு வந்தது எனவும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் இந்த அண்மைய உத்தரவின்படி, மறு அறிவிப்பு வரும் வரை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துடன் இணைக்கப்பட்ட எந்த நிரப்பு நிலையத்திலிருந்தும் எரிபொருள் இருப்புக்கள் வழங்கப்படாது.
அத்தியாவசிய சேவைகளுக்கான தங்கள் அடையாளத்தை நிரூபித்த பின்னர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திடம் இருந்து எரிபொருளைப் பெற முடியும் என்று அவர் மேலும் கூறினார்.
யாழ். மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 3 நாள்களே திறப்பு
யாழ் மாவட்டத்தில் போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடு மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும் என மாட்ட அரசாங்க அதிபர் தகவல் வெளியிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் பெற்றுக்கொள்வதில் உள்ள வரையறைகளால் போக்குவரத்து துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் காரணமாக மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தை வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் திறக்காதிருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆணையாளர் நாயகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் யாழ்.மாவட்ட போக்குவரத்து திணைக்களமும் சேவை பெறுநர்களின் தேவை கருதி திங்கள், செவ்வாய், மற்றும் புதன் ஆகிய கிழமைகளில் மட்டும் திறந்திருக்கும் என்பதுடன் குறிப்பிட்ட நாட்களில் சேவை பெறுநர்கள் சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குருந்தூர்மலை வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு
முல்லைத்தீவு குருந்தூர்மலையில் நீதிமன்ற தடையை மீறி விகாரை கட்டுமான பணி தொடர்பில், பொலிஸரிடம் விளக்கம் கோரிய வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.
இந்து தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு இடமான குருந்தூர் மலையில் தடையை மீறி புராதன முறைப்படி விகாரை அமைக்கப்படுவதுடன், புத்தர் சிலையை நிறுவவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்கு தமிழ் மக்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும் வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், கடந்த 16 ஆம் திகதி, குருந்தூர்மலை தொடர்பில், ஏற்கனவே, முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை நகர்த்தல் பத்திரம், ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையை மதிக்காமல், அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், பொலிஸார், தொடர்ச்சியாக இந்த வழக்கிலே, நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயல்படுபவர்களுக்கு சார்பாகச் செயல்படுகின்றமையையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்க சட்டத்தரணிகள் அனைவரும் இணைந்து, மன்றில், நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.
இந்தவகையில், குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும் பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை, ஆழ்ந்து அவதானித்த நீதிவான், வழக்குத் தொடுநரான பொலிஸார், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக, கடந்த 23 ஆம் திகதிக்கு திகதியிட்டிருந்தார். அன்றைய தினமும் மன்றில் பொலிஸார் மேலும் கால அவகாசத்தைக் கோரினர்.
இதனடிப்படையில், வழக்கு விசாரணை நேற்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது. நேற்று நடந்த வழக்கில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிவான் வழக்கை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)