
posted 10th July 2022
ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரை பதவி விலகுமாறு நேற்று சனிக்கிழமை நாடு முழுக்க முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களுக்கு இணைவாக மட்டக்களப்பிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் நேற்று அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்கத்தினாலும், பொதுமக்களினாலும் போராட்டம் நடத்தப்பட்டது.
நேற்று காலை காந்தி பூங்காவில் ஒன்றுகூடிய இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர்கள் தமது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
தற்போதைய நிலையில் மருந்தகங்களுக்கு மருந்து வராத காரணத்தினாலும், எரிபொருள் நெருக்கடி காரணமாக ஊழியர்கள் கடமைக்கு வராத காரணத்தினாலும், மக்களும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதுடன் தாமும் நெருக்கடிகளை எதிர்நோக்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதேபோன்று இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் பதவி விலகி ஆட்சியை சிறந்த முறையில் கொண்டு செல்பவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)