
posted 19th July 2022
மன்னார் மாவட்டத்தில் எரிபொருளை கவனத்தில் கொண்டு வெளிநாட்டுக்குச் செல்வோருக்கு பொது அதிசொகுசு போக்குவரத்து சேவை.
மன்னார் மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து வந்து செல்வோருக்கு போக்குவரத்துக்காக தனிப்பட்ட முறையில் வழங்கப்பட்டு வந்த எரிபொருள் சலுகையானது தற்பொழுது இடை நிறுத்தப்பட்டு பொதுவான போக்குவரத்துக்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ. ஸ்ரான்லி டிமெல் தெரிவித்துள்ளார்.
தற்போது மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுகின்ற நிலையில் வெளிநாடுகளிலிருந்து அதிகமானோர் மன்னார் மாவட்டத்திற்கு வருகை தருகின்றனர்.
அவ்வாறு கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கு வருவதற்கு அல்லது மன்னார் மாவட்டத்தில் இருந்து கொழும்பிற்கு செல்வதற்கு சராசரியாக 70 லிட்டர் எரிபொருள் தேவைப்படுகின்றது.
இவ்வாறனவர்களுக்கு இது வரையில் வெளிநாடு செல்பவர்களுக்கு எரிபொருள் வழங்கல் உதவிகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் இனிவரும் காலங்களில் இவ்வளவு தொகை ஒரு தனி நபருக்காக செலவிட முடியாத சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதனால் அரசாங்க அதிபர் அவர்கள் சொகுசு பேருந்து முகாமையாளர் இடம் தொடர்பு கொண்டு இவ்வாறு வெளிநாடு செல்பவர்களுக்கு அல்லது வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் கொழும்பிலிருந்து மன்னாருக்கு வருவதற்கு அதிசொகுசு பேருந்து சேவை ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்.
அந்த வகையில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் கொழும்பிலிருந்து மன்னார் மாவட்டத்திற்கும், ஞாயிறு, செவ்வாய், வியாழன் ஆகிய தினங்களில் மன்னாரிலிருந்து கொழும்பிற்கு செல்வதற்காக ஆயத்தம் செய்யப்பட்டுள்ளது.
அவ்வாறு செல்பவர்கள் 0774902440 என்ற தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்டு தங்கள் ஆசனங்களை பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து கொழும்புக்கு 1 லட்சம் ரூபாவும், பேசாலையில் இருந்து கொழும்பிற்கு 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாவும், வாகன கூலியாக அறவிடப்படுகின்றமையால் இதிலிருந்து பிரயாணிகளின் செலவுகளை குறைத்துக் கொள்ளவும், இம் மாவட்டத்தில் எரிபொருளை மட்டுப்படத்தவுமே இத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)