
posted 6th July 2022
யாழ்ப்பாணம் சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தினால் 6600 லட்டர் பெட்ரோல் புதன்கிழமை (06) விநியோகிக்கப்பட்டது.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடுகள் நிலவி வரும் நிலையில் இன்றைய தினம் புதன்கிழமை சாவகச்சேரி நுணாவில் பகுதியில் அமைந்துள்ள IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்கு நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
நேற்றைய தினம் யாழ் மாவட்ட செயலகத்தில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலுக்கு அமைவாக பொதுமக்களுக்கு 72% மும், அரச உத்தியோகத்தர்களுக்கு 28% மும் எரிபொருள் வழங்கப்பட்டதாக சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் வைத்திலிங்கம் சிவராசா ஊடகவியலாளர்களுக்கு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், மக்கள் பல நாட்களாக எரிபொருளுக்காக எமது எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு முன்பாக காத்திருந்தனர்.
எரிபொருளுக்காக காத்திருந்த அனைவருக்கும் தமக்கு கிடைக்கப்பெற்ற அனைத்து பெட்ரோலினையும் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் இராணுவம், பொலிஸாரின் உதவியுடன் மக்களுக்கு விநியோகித்ததாக குறிப்பிட்டார்.
அதேவேளை பெட்ரோலுக்காக காத்திருந்த மக்களுக்கு தாகசாந்தி நிலையம் அமைத்து இராணுவம் மற்றும் போலீசார் குளிர்பானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)