
posted 11th July 2022
கோட்டாபய எங்கே?
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பெருமளவிலான இராணுவத்தினர் நேற்று சனிக்கிழமை திடீரென வரவழைக்கப்பட்டதாக கொழும்பு செய்திகள் தெரிவித்தன.
ஜனாதிபதி மாளிகையில் இருந்து கோட்டாபய ராஜபக்ஷ வெளியேறியதை அடுத்து, விமான நிலையத்துக்கு பெருமளவிலான இராணுவம் வரவழைக்கப்பட்டு சிறப்பு பாதுகாப்பு போடப்பட்டதாக கொழும்பு செய்திகள் மேலும் கூறின.
ராஜித சேனாரத்ன மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் நடத்திய தாக்குதல்
முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ராஜித சேனாரத்ன மீது ஆர்ப்பாட்டக்காரர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட காணொளி சமூக வலைத்தளங்களில் பரவியது.
கொழும்பு கோட்டையில் இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதுடன், அமைச்சரின் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
நேற்றைய போராட்டத்துக்கு அனைத்துத் தரப்பிலிருந்தும் வருமாறு ராஜித சேனாரத்ன கடந்த சில நாட்களாக பல்வேறு ஊடகங்கள் ஊடாக பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
எந்தவொரு தீர்மானத்துக்கும் மதிப்பளிப்பேன் - ஜனாதிபதி
பிரதமரால் கூட்டப்படும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்துக்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளார்.
இதனை பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. முன்னதாக, நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாடி விரைவான தீர்மானத்தை எடுப்பதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார். அத்துடன் பாராளுமன்றத்தை கூட்டுமாறு, அவர் சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்தார்.
கோட்டாபயவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்த நிலையிலேயே பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியது.
மனோஜ் ராஜபக்ஷ வீட்டுக்கு எதிரே போராட்டத்தில் இறங்கிய இலங்கையர்கள்
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் புதல்வர் மனோஜ் ராஜபக்ஷவின் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள வீட்டுக்கு எதிரில் இலங்கையர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 13 ஆம் திகதி கட்டாயம் பதவி விலகவேண்டும் என அழுத்தம் கொடுத்து இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அத்துடன் அவரது குடும்ப உறுப்பினர்கள் அமெரிக்காவில் வீடுகளைக் கொள்வனவு செய்ய எப்படி பணம் கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் இலங்கையர்கள் என்ற வகையில் அந்த பணத்தை இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கூறியுள்ளனர்.
இதனிடையே சுவீடன் பாராளுமன்றத்திற்கு அருகில் ஜனாதிபதி கோட்டாபய உட்பட அரசாங்கம் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி இலங்கையர்கள் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)