
posted 15th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வெளிநாட்டுக்கு மோகத்தைக் காட்டி மோசடி செய்தவர் கைது
வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் (13) சனிக்கிழமை கைது செய்தனர்.
வடமராட்சி - அல்வாயை சேர்ந்த 41 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவை சேர்ந்த நபரை இத்தாலி நாட்டுக்கு அனுப்பி வைப்பதாகக்கூறி 23 இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்று மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட நபரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், சந்தேகநபர் நெல்லியடி பொலிஸ் பிரிவினுள் பதுங்கி இருக்கிறார் என்று பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் பிரகாரம் அங்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் சுமார் 10 நபர்களிடம் வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பண மோசடியில் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்துள்ளது. தொடர்ந்தும் சந்தேகநபரை பொலிஸ் காவலில் வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
திருட்டு சந்தேகநபர் கைக்குண்டுடன் கைது
இளவாலையில் கைக்குண்டுடன் திருட்டு சந்தேகநபர் ஒருவர் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இளவாலை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இளவாலையில் உள்ள வீடு ஒன்றை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என்று கருதப்படும் சந்தேகநபரை கைது செய்வதற்காக இளவாலை பொலிஸார் நேற்று அவரது வீட்டுக்கு சென்றனர்.
அப்போது அவரின் வீட்டில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டது. அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஐஸ் போதைப்பொருளுடன் இளைஞன் கைது
யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் ஐஸ் போதைபொருளை உடமையில் வைத்திருந்த இளைஞர் ஒருவர் நேற்று (14) ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது அவரிடமிருந்து ஒரு கிராம் 100 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் ஏழாலை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்திய மீனவர் 10 பேர் கைது
பருத்தித்துறை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய மீனவர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடுவோரை தடுக்கும் வகையில் கடற்படையினால் முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறைக்கு வடக்கே மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போதே இவர்கள் கைது செய்யப்பட்டதோடு அவர்களிடம் இருந்து இழுவை படகு ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகு காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்படுள்ளது.

பட்டப்போட்டி
பட்டப்போட்டியில் விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கை கோள் பட்டம்.
தொடர்ந்து கடந்த 6 ஆண்டுகளாக (2016, 2017, 2018, 2019, 2020, 2023 ) வல்வெட்டித்துறை பட்டப்போட்டியில் முதலிடத்தை பெற்று வந்த பட்டங்களை செய்த பட்டக்கலைஞன் இம்முறை பட்டப்போட்டியில் 2ம் இடம் பிடித்தார்.
விண்வெளியில் நிலை நிறுத்தப்பட்ட செயற்கை கோள் பட்டம் இரண்டாம் இடத்தை பெற்றுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)