
posted 3rd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
பக்ரீரியாவினால் பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகள் காட்டில் புதைக்க ஏற்பாடு
பழுதடைந்த உருளைக்கிழங்கு விதைகளை கிளிநொச்சி வனவளத் திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் உரிய நடைமுறைகளைப் பின்பற்றி புதைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குப்பிளான் களஞ்சியச்சாலையில் இருந்து நேற்று (02) செவ்வாய்க்கிழமை உருளைக்கிழங்கு விதைகளை பொதி செய்து வாகனத்தில் ஏற்றும் பணி முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் - குப்பிளானில் உள்ள களஞ்சியசாலையில் பழுதடைந்த உருளைகிழங்கு விதைகள் பொலித்தீன் பையில் பாதுகாப்பாக அகற்றி விவசாய நிலங்கள், நிலத்தடிநீர் மற்றும் குடியிருப்புக்களை பாதிக்காத வகையில் புதைக்கப்படவுள்ளது.
விவசாய திணைக்களத்தின் கண்காணிப்பில் மூன்று அடி ஆழத்திற்கு கீழே பாதுகாப்பு முறைமைகளை கையாண்டு சில தினங்களுக்குள் பழுதான உருளைக்கிழங்கு விதைகள் புதைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் பொதுமக்களுக்கோ, விவசாயிகளுக்கோ, மண்ணுக்கோ, நிலத்தடி நீருக்கோ பாதிப்பு ஏற்படாது என துறைசார் தரப்புகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பிலான கலந்துரையாடல் திணைக்கள தலைவர்கள், துறைசார் அதிகாரிகள், விவசாயிகளுக்கும் இடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை (31.12.2023) இடம்பெற்றது.
இதன்போது உருளைக்கிழங்கு விதைகளை பொலீத்தினில் பொதி செய்து பாதுகாப்பாக களஞ்சியசாலையில் இருந்து அகற்றி பாவனையற்ற வெளியான பகுதிகளில் புதைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது.
உலக வங்கியின் நவீன விவசாய மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் மானிய அடிப்படையில் யாழ்ப்பாணத்திற்கு கிடைத்த 21 மெற்றிக் தொன் உருளைக்கிழங்கு விதைகள் குப்பிளானில் அண்மையில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தது.
அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட குறித்த விதை உருளைக்கிழங்குகள் பெக்டோ பெக்டீரியம் கெரெட்டோபோரம் எனப்படும் பக்டீரியா தாக்கத்திற்குள்ளாமையினால் பழுதடைந்திருந்தமை தொடர்பில் கடந்த டிசெம்பர் 17ஆம் திகதி கண்டறியப்பட்டது.
குறித்த பக்டீரியா தாக்கத்தினால் 21 மெற்றிக் தொன் விதை உருளைக்கிழங்குகளையும் பயன்படுத்த முடியாத நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)