
posted 26th January 2024
துயர்பகிருங்கள்
டெங்கு நோயை கட்டுப்படுத்த யாழில் விழிப்புணர்வு பேரணி
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோயை கட்டுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு நடைபவனி நேற்று முன்தினம் (24) புதன்கிழமை நடைபெற்றது.
வடக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் ஏற்பாட்டில் நேற்று காலை திருநெல்வேலி சந்தியில் ஆரம்பித்த டெங்கு நோய் விழிப்புணர்வு நடைபவனி பலாலி வீதி வழியாக பரமேஸ்வரா சந்தியை அடைந்து அங்கிருந்து யாழ்ப்பாண பல்கலைக்கழக பிரதானநுழை வாயில் வரை நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு நடைபவனியில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி, யாழ். மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன், நல்லூர் பிரதேச செயலாளர் திருமதி யசோதா உதயகுமார், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி, கோப்பாய் பொலிஸார், சுகாதார பரிசோதர்கள், மருத்துவ மாதுக்கள், யாழ்ப்பாண பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பல்கலைக்கழக மாணவர்கள், தனியார் கல்வி நிறுவன மாணவர்கள் நல்லூர் பிரதேச சபையினர் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இதன்போது டெங்கு நோய் தொடர்பான பதாதைகளும் காட்சிப்படுத்தப்பட்டன. அத்துடன், பொது சுகாதாரப் பரிசோதகர்களால் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், பொது மக்களுக்கும் டெங்கு நோய் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)