
posted 25th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சித்த வைத்தியசாலை புதிய கட்டடம் திறப்பு
ஆயுர்வேத சித்த வைத்தியசாலையில் உள்நோயாளர்களின் யாழ்ப்பாண மாவட்ட சித்த வைத்தியசாலைக்கான புதிய கட்டடம் திறந்துவைக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் அச்சுவேலியில் இயங்கும் மாவட்ட சித்த வைத்தியசாலையின் சேவையினை விஸ்தரிக்கும் நோக்கில் புதிய கட்டடத் தொகுதி வடமாகாண ஆளுநர் கெளரவ பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களால் செவ்வாய்க் கிழமையன்று (23.01.2024) திறந்துவைக்கப்பட்டது.
இந்த புதிய கட்டடத்தில் இனிவரும் காலத்தில் இலவச சேவையினை இயக்கவும், அதேபோல முன்னர் இலவச சேவை இடம்பெற்ற இடத்தில் கட்டண சேவையினை இயக்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட மக்களிடையே உள்ளுர் மருந்துகளுக்கு அதிக வரவேற்பு உள்ள நிலையில் நோயாளர்களின் வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன் முன்னடுக்கப்பட்ட இந்தப் செயற்திட்டத்துக்கு 105 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
ஆயுர்வேத வைத்தியசாலையின் பல்வேறு சேவைகளுக்குமான புதிய பிரிவுகளும் திறந்து வைக்கப்பட்டன. நோயாளிகளுக்கு சுத்திகரிக்கப்பட்ட நீர் மற்றும் வெந்நீர் பெற்றுக்கொள்ள ஏதுவாக வெந்நீர் - சுத்திகரிப்பு இயந்திரமும் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் 'ஆகார ஒளடதம்' என்னும் பாரம்பாரிய உணவு தொடர்பான இறுவட்டு, 'சித்தமருந்து செய்முறை தொகுப்பு' எனும் நூலின் இறுவட்டும் வெளியிட்டுவைக்கப்பட்டன.
நிகழ்வின் பின்னர் கெளரவ ஆளுநர் நோயாளர்களைச் சந்தித்து அவர்களின் நலங்களை விசாரித்ததுடன் அவர்களுடனும் கலந்துரையாடினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)