
posted 12th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
சர்வதேச பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கடற்படை
சர்வதேச பாதுகாப்பிற்காக செங்கடல் நோக்கி பயணிக்கும் கடற்படைக் கப்பல்கள் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்துவதற்கு ஏன் தயங்குகின்றன என யாழ். மாவட்ட கிராமிய மீனவர் அமைப்புக்களின் தலைவர் செல்லத்துரை நற்குணம் கேள்வி எழுப்பியுள்ளார். வடமராட்சியில் நேற்று (11) வியாழன் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்திய இழுவைப் படகுகளைக் கட்டுப்படுத்தத் தயங்கும் கடற்படை சர்வதேச பாதுகாப்பிற்காக அனுப்பப்படுகிறது. ஆனால், சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களை கைது செய்வதும், கைதானவர்களை விடுவிப்பதுமே அரசாங்கத்தின் தொடர் செயற்பாடாக காணப்படுகின்றது.
இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரத்தை அச்சுறுத்தும் வகையிலும், எமது நாட்டின் வளங்களை அழிக்கும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தாது விடுப்பது கவலையளிக்கிறது.
ஜனாதிபதியின் அண்மைய விஜயத்தின்போதும் மீனவர் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுதற்கு மீனவ அமைப்புக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. அதேபோல் வெளிநாட்டு படகுகளும் இலங்கை அரசின் அனுமதியினை பெற்று நமது நாட்டு வளத்தை சூறையாடுவதை எம்மால் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)