
posted 10th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கிழக்கில் தொடரும் மழை, வெள்ள அனர்த்தம்
கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் தொடர்ந்து வரும் சீரற்ற கால நிலையுடனான அடை மழை தொடர்ந்த வண்ணமிருப்பதால் மக்கள் பெரும் அவலங்களுக்குள்ளாகியுள்ளனர்.
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் அடைமழையாலும், முக்கிய நீர்ப்பாசனக் குளங்களில் நீர் மட்டங்கள் அபரிமிதமாக உயர்ந்துள்ளதால், குறித்த குளங்கள், சமுத்திரங்களிலிருந்து நீர் திறந்து விடப்படுவதாலும் தாழ் நிலப்பிரதேசங்கள் பல வெள்ளப்பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இதனால் குறித்த மாவட்டங்களின் தாழ் நிலப்பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் நூற்றுக்கணக்கில் தமது வீடுகளை விட்டும் வெளியேறி உறவினர் வீடுகளிலும், முகாம்களிலும் தங்க வேண்டிய அவலமும் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட அரசாங்க அதிபர்களின் பணிப்பிற்கு அமைய இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள பிரதேசங்களையும், பாதிக்கப்பட்ட மக்களையும் அவ்வப் பிரதேச செயலாளர்கள் நேரில் பார்வையிட்டு தகவல் திரட்டி வருவதுடன், இடம்பெயரும் நிலைக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல் உட்பட நலத்திட்டசெயற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளனர்.
அதேவேளை வெள்ளப்பாதிப்புக்களுக்கு உள்ளாகியுள்ள மக்களுக்கு பல பொது அமைப்புக்களும் அத்தியாவசிய உதவிகளை வழங்குவதில் ஆர்வம்காட்டி வருகின்றன.
வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் காணப்பட்ட வளிமண்டல காற்று சுழற்சி தற்Nபுhது மாலைதீவு கடற்பிராந்தியம் நோக்கி மேற்கு திசையில் நகர்வதன் காரணத்தால், இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் மழை இன்றும் (10) தொடரும் சாத்தியமே இருப்பதாக வானிலை அவதான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் அம்பாறை மாவட்ட மக்கள் வெள்ள நிலைமை தொடர்பில் மிகவும் அவதானத்டன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பிரதான சமுத்திரமான இங்கினியாகல சேனனாயக்க சமுத்திர நீர்மட்டம் 108 அடிகளையும் தாண்டிச் செல்வதால், 110 அடி கொள்ளளவு கொண்ட இந்த சமுத்திரத்தின் 5 வான்கதவுகள் மூலம் 5 அடிக்கு மேல் நீர் திறந்து விடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக களி ஓடை ஆறு பெருக்கெடுத்துள்ளதுடன், ஆத்தியடிகட்டு எனப்படும் அணைக்கட்டின் பிரதான 12 வான் கதவுகள் உட்பட 22 வான்கதவுகளும் திறக்கப்பட்டு பெரும் அபாய நிலமையும் அறிவிக்கப்பட்டுள்ளதுடன்.
இந்த அணைக்கட்டுப் பகுதிக்கு பொது மக்கள் எவரும் கண்டிப்பாக வருகை தர வேண்டாமென சம்பந்தப்பட்ட நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகள் கோரியுமுள்ளனர்.
அத்துடன் ஆற்றோரங்கள், மற்றும் தாழ் நிலப்பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் கலாநிதி எம்.ஏ.சீ.எம். ரியாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)