
posted 3rd January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
காங்கேசன்துறை - அனுராதபுரதம் ரயில் சேவை 7ஆம் திகதி முதல் ஆரம்பம்
எதிர்வரும் 7ஆம் திகதி முதல் காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவை இடம்பெறவுள்ளதாக யாழ்ப்பாண ரயில் நிலைய அத்தியட்சகர் சுரேந்திரன் தெரிவித்தார்.
ரயில் பாதை திருத்த பணிக்காக காங்கேசன்துறை - கொழும்பு ரயில் சேவை நிறுத்தப்படவுள்ளமை தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்;
மாகோ முதல் ஓமந்தை வரையான ரயில் புனரமைப்பு திட்டத்தின் முதலாம் பாகம் ஓமந்தை முதல் அனுராதபுரம் வரை கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஆறு மாதங்களுக்கு இடம்பெற்று முடிவடைந்த நிலையில் இப்போது இரண்டாம் பாகமான அனுராதபுரத்தில் இருந்து மாகோ வரையிலான சுமார் 65 கிலோ மீற்றர் நீளமான ரயில் பாதை புனரமைப்பு செய்யப்படவுள்ளது.
இந்த புனரமைப்புப் பணிகளுக்காக எதிர்வரும் 6 திகதி முதல் அனுராதபுரம் மற்றும் மாகோவுக்கு இடையிலான 65 கிலோ மீற்றர் ரயில் பாதை மூடப்படுகின்றது. இக்கால பகுதியில் காங்கேசன்துறையிலிருந்து அனுராதாபுரம் வரை இரண்டு ரயில் சேவைகள் இடம்பெறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதேபோல ஏற்கனவே இடம்பெறும் உள்ளூர் ரயில் சேவைகளும் வழமை போல் இடம்பெறும்.
மேலும் காங்கேசன்துறை - கொழும்பு ரயிலுக்கான முற்பதிவு ஆசனங்களுக்கான பற்றுச் சீட்டுகள் எதிர்வரும் 6ஆம் திகதி வரை முற்பதிவு செய்யப்பட்டுள்ளதன் காரணமாக சாதாரண ரிக்கெட் பயணிகள் மாத்திரம் தமது ரிக்கெட்டுகளை பெற்று பயணிக்க முடியும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)