
posted 7th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
வடக்கு மாகாண வர்த்தகர்களின் பிரச்சினைக்கு இரு மாதங்களில் தீர்வு
வட மாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகள் எதிர்வரும் இரு வாரங்களில் வடக்குக்கு வந்து இந்த விடயம் தொடர்பில் ஆராய்வர். வட மாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்கு செயலூக்கமான நிறுவனமொன்றை நிறுவ எதிர்பார்த்துள்ளதாகவும் ஜனாதிபதி இதன்போது கூறினார்.
யாழ்.மாவட்ட தொழில்துறையினர், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடந்த சந்திப்பிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த சந்திப்பில், வடக்கு மாகாணத்தை சேர்ந்த தொழில்துறையினர், மீனவ சமூகம் மற்றும் விவசாயிகள் உள்ளடங்கிய சுமார் 300 பேர் கொண்ட குழு இந்நிகழ்வில் கலந்துகொண்டு, தமது தொழில்துறை தொடர்பான பிரச்சினைகள் மற்றும் புதிய முன்மொழிவுகளை ஜனாதிபதியிடம் முன்வைத்தனர்.
இந்த விடயங்கள் குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சில பிரச்சினைகளுக்கு அதே நேரத்தில் தீர்வுகளை வழங்கவும் நடவடிக்கை எடுத்தார்.
வட மாகாணத்துக்கு கைத்தொழில் வலயமொன்றை வழங்குமாறு கைத்தொழில்துறையினர் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளதுடன், அதற்கு தேவையான காணியை இனங்காணுமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
அத்துடன், மாகாண வர்த்தக ஊக்குவிப்பு நிலையமொன்றை வடமாகாணத்திற்கு விரைவாக வழங்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.
வட மாகாணம், தேசிய பொருளாதாரத்திற்கு வினைத்திறனாக பங்களிப்பதற்கு தொழில்துறைகளை அபிவிருத்தி செய்வது இன்றியமையாதது என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்க்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)