
posted 21st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மீனவர்களை உடன் விடுவிக்க முடியுமானால் எமது பிரச்சினையை ஏன் தீர்க்கமுடியாது?
"இரண்டு நாட்டு உயர்மட்ட குழுக்கள் பேசி 40 இந்திய மீனவர்களை விடுவிக்க முடியும் என்றால், ஏன் இரண்டு நாட்டு உயர்மட்ட குழுக்களும் பேசி எங்களது எல்லைக்குள் இந்திய இழுவைப்படைகள் வரக்கூடாது என்பதற்கு ஒரு முடிவு எடுக்க முடியாது."
இவ்வாறு யாழ். மாவட்ட க.தொ.கூ.ச. சமாசங்களின் சம்மேளனத்தின் முன்னாள் உப தலைவரும், வடமராட்சி வடக்கு க.தொ.கூ. சங்கங்களின் சமாசத்தின் உப தலைவருமான நாகராசா வர்ணகுலசிங்கம் கேள்வி எழுப்பினார்.
யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (20) சனிக்கிழமை இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் தெரிவிக்கையில்,
"இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தமிழ்நாட்டுக்கு வருகிறார் என்றவுடன் இலங்கை மற்றும் இந்திய அரசின் உயர்மட்ட குழுக்கள் இரண்டும் கதைத்து ஒரு சில மணித்தியாளத்துக்குள் 40 இந்திய மீனவர்களும் விடுவிக்கப்படுவர்கள் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை ஏன் ஒரு சில மணித்தியாலத்தில் எடுத்துள்ளனர்.
நல்லெண்ண அடிப்படையிலே 40 இந்திய மீனவர்களையும் விடுவித்துள்ளோம். இனி எல்லை தாண்டி இந்திய மீனவர்கள் வருவார்களானால் அவர்களை விட மாட்டோம். அவர்களது படகையும் விடமாட்டோம் என்ற ஒரு முடிவை எடுத்து எங்களது மக்களுக்கு காத்திரமான முடிவை சொல்ல வேண்டும். அப்படி ஒரு முடிவை எடுப்பீர்களானால் எந்த ஒரு இந்திய இழுவைப் படகுகளும் எல்லை தாண்டி வராது. அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி உங்களை தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன்" என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)