
posted 21st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மட்டு ICST பல்கலைக்கழகத்திற்கு ரவூப் ஹக்கீம் விஜயம்
மட்டக்களப்பில் (புணானை) அமைந்துள்ள ICST எனும் விஞ்ஞான, தொழில் நுட்பத்திற்கான சர்வதேச பல்கலைக் கழகத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விஜயம் செய்தார்.
பல்கலைக்கழக நிறுவுனரும், முன்னாள் ஆளுநருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அழைப்பின் பேரில் அங்கு சென்ற ரவூப் ஹக்கீம் கற்கை பிரிவுகளை பார்வையிட்டதுடன் கல்வி கற்கும் மாணவர்களுடனும் கலந்துரையாடினார்.
சவூதி அரேபியாவின் பாரிய நிதிப் பங்களிப்புடன் முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவினால் நிறுவப்பட்ட இப்பல்கலைக்கழகம், கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில் 2019 ஏப்ரல் 21அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்தது.
கொரோனா வைரஸ் தொற்றுக் காலத்தில் கொரோனா நோயாளர் பராமரிப்பு நிலையமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
சில மாதங்களுக்கு முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் அங்கிருந்து இராணுவம் வெளியேறியதுடன் நிறுவுனர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்விடம் குறித்த பல்கலைக்கழகம் கையளிக்கப்பட்டது.
இந்நிலையில் பலத்த சேதமடைந்திருந்த பல்கலைக்கழக கட்டடத் தொகுதிகள், தளபாடங்கள், உபகரணங்கள் யாவும் புனரமைப்பு செய்யப்பட்டு, பல்கலைக்கழக வளாகம்உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டு, அங்கு கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)