
posted 31st January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
மக்களின் ஆணை மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம்
தேர்தல் மூலமே நாம் ஆட்சிக்கு வருவோம். தற்போதைய அரசாங்கத்துக்கு முதுகெலும்பு இல்லை. அவ்வாறு முதுகெலும்பு இருந்தால் தேர்தல் ஒன்றை நடத்துங்கள் - இவ்வாறு கூறிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, மக்கள்மீது கண்ணீர்புகை, நீர்த் தாரை பிரயோகத்தை மேற்கொண்டு அரச பயங்கரவாதம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்றும் அவர் சாடினார்.
இலங்கையின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் மாபெரும் அரசுக்கு எதிரான பேரணி ஒன்று ஆரம்பமாகியது.
இந்தப் பேரணி கலைக்கப்பட்ட நிலையில், மீண்டும் ஆதரவாளர்களை ஒன்றிணைத்து ஆற்றிய உரையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்;
நீதிமன்றத் தடைஉத்தரவு பிறப்பித்த பாதைகளில் நாங்கள் பேரணி நடத்தவில்லை. நாம் சட்டத்தை மீறி செயல்படவில்லை. வேறு எதுவும் எங்களுக்கு வேண்டாம் எங்களுக்குத் தேர்தலே வேண்டும்.
அரசியல் ரீதியிலான 'டீல்'கள் மூலம் அல்லாமல் மக்கள் ஆணையுடனேயே ஆட்சிக்கு வருவோம். மக்கள் ஆசீர்வாத்தின் ஊடாகவே நாம் ஆட்சிக்கு வருவோம் என்பதை இந்த ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்திடம் கூறுகிறோம்.
ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் மக்கள் வெள்ளத்துக்குப் பயந்து விட்டனர். இது கோழைத்தனமான அரசாங்கம் - முதுகெலும்பு இல்லாத அரசாங்கம். மக்களுக்கு பயந்த அரசாங்கம் காலையில் (நேற்று காலை) ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தின் சில கைபொம்மைகள் நீதிமன்றம் சென்று சில பிரதேசங்களுக்குத் தடை உத்தரவைக் கோரினர்.
ஆனால், நாங்கள் நடு வீதியில் பேரணி சென்றமை சட்டத்தை மீறியல்ல. தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அல்ல. நாங்கள் சட்டத்தை மீறவில்லை. இங்கு ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகளை - மனித உரிமைகளை வேண்டுமேன்றே மீறினர். ரணில் - ராஜபக்ஷ அரசாங்கத்தின் ரணிலுக்கும் மகிந்தவுக்கும் முதுகெலும்பு இருந்தால் மக்கள் மத்தியில் வருமாறு அழைப்பு விடுக்கிறோம்.
ரணில் - ராஜபக்ஷ அரசாங்கம் கண்ணீர் புகையை கொண்டு தாக்குதல் நடத்தினர். ஆனால், நாங்கள் தாக்குதல் நடத்துவது வெடி குண்டு, வாள், துப்பாக்கி மூலம் அல்ல. தேர்தல் ஊடாக நாம் அரசாங்கத்துக்கு பாடம் புகட்டுவோம். இதுதான் அரச பயங்கரவாத்தின் அடையாளமாகும். அடக்குமுறை, மிலேச்சத்தனம் மூலம் அரசாங்கம் மக்களை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளது.
எனவே, இந்த மோசமான அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப 220 இலட்சம் மக்களே தயாராகுங்கள் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)