
posted 16th January 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
கறுப்புப் பட்டி தாங்கிய பொங்கல் பானைகள் போராட்டம்
மயிலத்தமடு மாதவனை போராட்டத்தின் 124ஆவது நாளை முன்னிட்டு பட்டிப்பொங்கல் தினமான இன்று செவ்வாய்க்கிழமை (16) மட்டக்களப்பு காந்திப் பூங்கா வளாகத்தில் பண்ணையாளர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களால் 124ஆவது நாளை முன்னிட்டு 124 பொங்கல் பானைகள் கறுப்புப் பட்டி அணிவிக்கப்பட்டு கைகளில் ஏந்தியிருந்தனர்.
இப்போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், எம். ஏ. சுமந்திரன், கோவிந்தன் கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான எஸ். ஸ்ரீநேசன் மற்றும் மதத்தலைவர்கள், பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இவர்கள் "நீதிமன்ற உத்தரவை நடைமுறைப் படுத்து", "தீர்வை வழங்கு" போன்ற கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்துக்குப் பேரணியாகச் சென்றனர்.
இந்நிலையில் மாவட்ட செயலக நுழைவாயில் பூட்டப்பட்டு பொலிசார் கடமையில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் அரசாங்க அதிபரை தாம் சந்திக்க வேண்டுமெனக் கூறினர். பின்னர் அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளீதரன் ஸ்தலத்துக்கு விரைந்தார். அவர் பாராளுமன்ற உறுப்பினர்களோடு போராட்டக்காரர்களின் சில பிரதிநிதிகளை வருமாறு பணித்தார்.
இதன்படி அவர்கள் அரசாங்க அதிபரைச் சந்தித்து தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரைக் கையளித்தனர்.
தாம் இதனை சமம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் கூறியதையடுத்து போராட்டக்காரர்கள் அவ்விடத்தை விட்டு அகன்று சென்றனர்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)