
posted 8th January 2023
மன்னார் மறைமாவட்டத்தில் மூவியரசர் பட்டினம் என அழைக்கப்படும் பேசாலையில் மூவியரசர் விழா ஞாயிற்றுக்கிழமை (08) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
இன்றையத் தினத்தில் வருடத்தில் ஒருமுறை இக் கிராமத்தின் பாதுகாவலியாம் புதுமை நிறைந்தது என பேசப்படும் புனித வெற்றி அன்னையின் ஆலயத்தில் வீற்றிருக்கும் புனித வெற்றி அன்னையின் திருச்சுரூபம் சிம்மாசனத்திலிருந்து இறக்கப்பட்டு குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அன்னையின் கையில் இருக்கும் பாலக இயேசுவை அருட்பணியாளரால் அவர்களின் கையில் கொடுக்கப்பட்டு ஆசீர்வதிக்கப்படும் சடங்கும் இடம்பெறுவது வழக்கம்.
இச் சடங்கைத் தொடர்ந்து அன்னையின் திருச்சுரூபம் பேசாலை கிராமத்துக்குள் பவனியாக
எடுத்துச் செல்லப்பட்டு பின் கடற்கரை பகுதியின் ஊடாக கொண்டு வரப்பட்டு, அன்னையின் பாதத்தை கடல் நீரால் கழுவி அந்நீரை கடலுடன் கலக்கும் சடங்கும் இடம்பெற்றது.
இச்சடங்கின் பின்பு ஆலயத்தில் அன்னையின் திருச்சுரூப ஆசீரும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
பிள்ளைப் பாக்கியமற்ற இக்கிராமத்தைச் சேர்ந்தவர்களும், வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் இவ் ஆலயத் தரிசனத்தில் பிள்ளைவரம் பெற்ற பெருமை புனித வெற்றி அன்னை அருள்பாலிப்பிற்குச் சான்றுகளாக அமைவதை அனவரும் அறிந்திருப்பர்.
இச் சடங்கில் பங்கு கொண்ட பக்தர்கள் அனைவரும் பக்தி நிறைந்தவர்களாக அருள்பெற்று உவகை கொண்டிருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)