நிந்தவூர் பிரதேச செயலகம் சாதனை

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான அடைவு மட்ட மதிப்பீட்டு திட்டத்தில் கூடிய பயனாளிகளை இணைப்புச் செய்து நிந்தவூர் பிரதேச செயலகம் தேசிய ரீதியில் முதலிடம் பெற்று சாதனைபடைத்துள்ளது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் குறித்த பயனாளிகளை இணைக்கும் போட்டித் திட்டத்தின் கீழ் அம்பாறை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட 3500 எனும் இலக்கில் 11801 ஆக நிந்தவூர் பிரதேச செயலகம் பயனாளிகளை இணைப்புச் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையிலேயே தேசிய ரீதியாக 25 மாவட்டங்களின் தர வரிசைப்படுத்தியதில் அம்பாறை மாவட்டம் முதலிடம் பெறவும், நிந்தவூர் பிரதேச செயலகம் வழிவகுத்துள்ளது.

துயர் பகிர்வோம்

மேலும் தேசிய ரீதியாக முதலிடத்தைப் பெற்றுள்ள நிந்தவூர் பிரதேச செயலகம், அம்பாறை மாவட்டம் உட்பட வடக்கு கிழக்கிலும் முதலிடம் பெற்று பெருமை சேர்த்துள்ளது.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ், இந்த சாதனை மூலம் 25 மாவட்டங்களின் தரவரிசைப்படுத்தலில், அம்பாறை மாவட்டத்திற்கு முதலிடம் பெற்றுத் தந்த நிந்தவூர் பிரதேச செயலகத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

அரசாங்க அதிபர் டக்ளஸ் இது தொடர்பாக பாராட்டுத் தெரிவிக்கும் கடிதம் ஒன்றை, நிந்தவூர் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ஏ.எம். லதீபுக்கு அனுப்பிவைத்துள்ளார்.

இதேவேளை இந்த தெரிவுக்கான விருது வழங்கும் நிகழ்வு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில், இலங்கை சமூக பாதுகாப்பு சபையால் நடத்தப்படவிருப்பதாகவும், மேற்படி தர வரிசைப்படுத்தலில் தேசிய ரீதியாக மட்டக்களப்பு கோரளைப்பற்று பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தையும், யாழ் கோப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளதாகவும் அறியவருகின்றது.

நிந்தவூர் பிரதேச செயலகம் சாதனை

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)