
posted 17th January 2023
திருகோணமலை மூதூர் வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று க.பொ.த. உயர் தரக்கற்றல் செயற்பாடுகளுக்காக சேனையூர் மூதூர் இலங்கைத்துறை முகத்துவாரம் மற்றும் பள்ளிக்குடியிருப்பு போன்ற இடங்களுக்குச் சென்று வரும் ஐந்து மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய (16) தினம் பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
முன்னதாக பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலய பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் விடுக்கப்பட்ட உதவிக் கோரிக்கைக்கு இணங்க சேனையூர் மத்திய கல்லூரியின் 21ஆவது அணியினரால் செயற்படுத்தப்படும் "நண்பர்கள்” கல்வி நலன்புரி அமைப்பினால் இவ்வுதவிகள் வழங்கப்பட்டன.அதற்கமைய குறித்த அமைப்பின் பிரதிநிதியும் பொதுச்சுகாதாரப் பரிசோதகருமான கோபகன் அவர்களும் பாடசாலையின் உப அதிபர் பா. ரஞ்சித்குமார் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு பிள்ளைகளுக்கான துவிச்சக்கர வண்டிகளை வழங்கி வைத்தனர்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)