திருவெம்பாவை விரதம் - பாத யாத்திரை

திருவெம்பாவை விரதத்தை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபையினரால் வருடாவருடம் முன்னெடுக்கப்படும் பாத யாத்திரை நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றது.

மாதகல் சம்பில்துறை சம்புநாத ஈஸ்வரத்திலிருந்து காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை நோக்கி 10ஆவது வருடமாக இந்தப் பாத யாத்திரை நடைபெற்றது.

நந்தி கொடியுடன் அடியவர்கள் சிவனுடைய நாமங்களை உச்சரித்தும், பாராயணம் செய்தும், ஆன்மீக கீர்த்தனைகளை பாடிய வண்ணம் பாத யாத்திரையில் ஈடுபட்டனர்.

துயர் பகிர்வோம்

சாந்தை சிதம்பரேஸ்வரர் ஆலயம், சாந்தை வீரபத்திரர் ஆலயம், பனிப்புலம் முத்துமாரியம்மன் ஆலயம், சுழிபுரம் பறாளாய் பிள்ளையார் முருகன் ஆலயங்கள், சுழிபுரம் மத்தி கறுத்தனாத்தோட்டம் துர்க்கையம்மன் ஆலயம், சுழிபுரம் மேற்கு ஹரிகர புத்திர ஐயனார் ஆலயம், சுழிபுரம் மேற்கு கதிர்வேலாயத சுவாமிகள் ஆலயம், சுழிபுரம் பெரியபுலோ வைரவர் ஆலயம், மூளாய் வதிரன்புலோ பிள்ளையார் முருகன் ஆலயங்கள், மூளாய் இராவணேசுவரர் ஆலயத்தினை தரிசித்து பொன்னாலை நாராயணன் தாகசாந்தி நிலையத்தினரின் அன்னதானத்தை தொடர்ந்நு வலந்தலை மடத்துக்கரை முத்துமாரியம்மன் ஆலயம் முதலான திருத்தலங்களை தரிசித்தவாறு காரைநகர் ஈழத்து சிதம்பரத்தை சென்றடைந்து நிறைவுபெற்றது.

வடக்கு - கிழக்கு, மலையகம் என நாடளாவிய ரீதியில் குறித்த பாதயாத்திரையில் அதிகளவான சிவனடியார்கள் கலந்துகொண்ட நிலையில் அறநெறி கல்வியை மாணவர்களுக்கு ஊக்குவித்தல், திசைமாறி செல்லும் இளைஞர்களை நெறிப்படுத்துவதையும் இவ்வருடம் பிரதான நோக்கமாக கொண்டு ஏழைப்பங்காளனை காணவாரீர் எனும் தொனிப்பொருளில் குறித்த பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டது.

திருவெம்பாவை விரதம் - பாத யாத்திரை

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)