
posted 12th January 2023
“இனவாதிகளிடமிருந்து தமிழ் மக்களையும், மண்ணையும் பாதுகாப்பதற்கு ஒரே ஒரு பலம் தமிழ் அரசியில் தலைமைகளின் ஒற்றுமையேயாகும். ஒற்றுமையை சிதறடித்தால் சமூகமே தொடர்ந்தும் பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டிய அவலம் ஏற்படும்” இவ்வாறு, முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் (ஈ.பி.ஆர்.எல்.எப் பத்மநாபா மன்றம்) இரா துரைரெட்ணம் விடுத்துள்ள ஊடக அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த ஊடக அறிக்கையில் மேலும் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இனவாதிகளிடமிருந்து தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு ஒரே ஒரு பலம் தமிழர்களின் ஒற்றுமையே.
உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பாக தமிழரசுக் கட்சி மத்தியகுழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானமானது அக் கட்சியின் ஜனநாயகமே. ஆனால் கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் இனவாதிகளின் செயற்பாடுகள் காரணமாகவும், இனவாத அரசின் செயற்பாடுகளாலும் கடந்த காலத்தில் நேரடியாக பாதிக்கப்பட்ட எமது சமூகம் அரசிலுள்ள தமிழ் ஆட்சியாளர்களாலும் நேரடியாக பாதிக்கப்பட்டது எமது சமூமாகும்.
இந்த நிலையில் எதிர்காலத்தில் தமிழர்களைப் பலப்படுத்துவதற்கு எம் மத்தியில் இருக்கும் ஒற்றுமை சிதைந்து விடக் கூடாது என மக்கள் விரும்புவதால் ஒற்றமையே எமது பலம்.
இதை கருத்திற் கொண்டு தமிழரசுக் கட்சி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற தவறியது போல் ஏனைய கட்சிகளான ரெலோ, பிளட் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் தனித்தனியாக செயற்படுவதென்பது ஆரோக்கியமில்லை.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)