
posted 11th January 2023
விடுதலைப் புலிகளுக்கு அதி நவீன தொழில்நுட்ப கருவிகளைக் கடத்தியதாக 2009 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்ட வழக்கில், தமிழ் அரசியல் கைதி ஒருவர் 14 வருடங்களின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காக 2007ஆம் ஆண்டு சிங்கப்பூரிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட கையடக்க வானொளிகள் உட்பட சில நவீன தொழில்நுட்ப உபகரணங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் தலைமையத்தில் ஒப்படைக்க வவுனியா இரட்டைப் பெரிய குளத்தடியில் லொறியில் வரும் பொழுது வவுனியா பொலிஸாரினால் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்பு குற்றப் புலனாய்வுத் துறைக்கு கையளிக்கப்பட்டதாக பொலிஸார் குற்றம்சாட்டினர்.
2009 ஆம் ஆண்டு இந்த குற்றச் சாட்டுக்களுக்காக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைத்து விசாரணை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான கனகரத்தினத்தின் மகனான ஆதித்யன் கொழும்பு நீதவான் நீதிமன்றின் நீதிபதியினால் 14 வருடங்களின் பின்னர் நிரபராதியென நேற்று (10) விடுதலை செய்யப்பட்டார்.
இவ்வழக்கின் எதிரியான கனகரத்தினம் ஆதித்யன் சார்பில் சட்டத்தரணி பிருந்தா சந்திரகேஸ் அனுசரணையில் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா மன்றில் ஆஜராகினார்.
இதேவேளை, ஏனைய வழக்குகளில் அவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)