அனைத்து தழிழ் அரசியல்  கட்சிகளும்  ஓரணியில் திரள வேண்டும்

ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்துவதற்கு அனைத்து தழிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் என வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட மன்னார் மக்களின் கவனயீர்ப்பு போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள எட்டு மாவட்டங்களிலும் தமிழ் அரசியல் கட்சிகளின் கவனத்துக்கு கொண்டுவரும் முகமாக மன்னார் நகரில் வியாழக்கிழமை (05.01.2023) நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை காலை தொடக்கம் நண்பகல் வரை முன்னெடுத்தனர்.

துயர் பகிர்வோம்

இப் போராட்டத்தின்போது பதாதைகள் ஏந்தியவண்ணம் இவர்கள் முன்வைத்திருந்த விடயங்களாவது;

  • 'வடக்கு கிழக்கு மாகாணங்களில் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு ஒரு தனி மாகாணமாக உருவாக்கப்பட வேண்டும்'
  • 'அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திகழ வேண்டும்'
  • 'தமிழ் அரசியல் கட்சிகளுக்கிடையே அரசியல் தீர்வுக்கான முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்'

என இவ்வாறான கருத்துக்கள் கொண்ட பதாதைகள் ஏந்தியவண்ணம் போராட்டக்காரர்கள் காணப்பட்டனர்.

அனைத்து தழிழ் அரசியல்  கட்சிகளும்  ஓரணியில் திரள வேண்டும்

The Best Online Tutoring

மேலும் தெரிவிக்கையில்;

வடக்கு கிழக்கு சிறுபான்மை மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்த பேச்சு வார்த்தைகள் சிறுபான்மை தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையே நடைபெறவுள்ளதாக அறிகின்றோம். அதனை நாங்கள் பெரிதும் வரவேற்கின்றோம்.

எனினும், தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் கோரிக்கைகளையும், அரசியல் தேவைகளையும் உள்ளடக்கிய வகையில் இப்பேச்சு வார்த்தைகள் அமைய வேண்டுமாயின் இப்பேச்சு வார்த்தைகள் வெளிப்படை தன்மை உடையதாக நடைபெற வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றோம்.

ஆனால் தற்போதைய நிலையில் தமிழ் அரசியல் கட்சிகளிடையே அரசியல் தீர்விற்கான நடவடிக்கைகள் ஒருமித்த முறையில் முன்னெடுக்கப்படவில்லை என்பதனை நாம் வருத்தத்துடன் தெரிவிக்கின்றோம்.

மேலும், நடைபெறவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான இப் பேச்சு வார்த்தைகளில் தனியொரு கட்சியைச் சார்ந்த ஒரு சில பிரதிநிதிகள் மாத்திரம் கலந்து கொள்ளவுள்ளதாக ஊடகங்கள் ஊடான தகவல்கள் வெளிவருகின்றமையை நாம் பார்க்கின்றோம்.

மேலும், அக்குறிப்பிட்ட அரசியில் கட்சியின் தலைமைத்துவங்களிடேயும் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மையுடைய கலந்துரையாடல்களோ, ஒருமித்த முன்னெடுப்புக்களோ காணப்படாததை நாங்கள் இங்கு சுட்டிக் காட்டுகின்றோம். இது இத்தரப்பினர்களை தேர்தல் மூலம் தெரிவு செய்த மக்கள் மத்தியில் காணப்படும் விமர்சனமாக உள்ளது.

இத்தகைய நடவடிக்கைகள் தமிழ் மக்களின் நிலையான அரசியல் தீர்விற்கு பங்கம் விளைவிக்கும் ஜனநாயகமற்ற போக்காக காணப்படுவதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.

எனவே அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு ஒரே குரலில் ஐக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மீளப் பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வினை வலியுறுத்த வேண்டும்.

இதுவே தமிழ் மக்கள் தமது ஜனநாயக வாக்களிப்பின் மூலம் தெரிவு செய்த தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் கடமையாகும்.

அந்த வகையில் கீழ் குறிப்பிடப்படும் முக்கிய விடயங்களிலும், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்துமாறு வேண்டுகின்றோம்.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீள ஒருங்கிணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு தனி ஒரு மாகாண அலகாக உருவாக்கப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்துக்கு மத்திய அரசினால் மீளப்பெறமுடியாத சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த வடக்கு கிழக்கு மாகாண அலகின் ஆட்சியானது மக்களால் ஜனநாயகமான தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் சபையால் மேற்கொள்ளப்பட வேண்டும். இதில் பெண்கள் ஐம்பது வீதம் இருப்பது உறுதிசெய்யப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாண எல்லைக்கு உட்பட்ட காணிகள் யாவும் மாகாண ஆட்சியின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதாக அமைய வேண்டும்.

தற்போது வடக்கு கிழக்கில் காணப்படும் இராணுவமயமாக்கல் முற்றிலும் நீக்கப்பட்டு, தேசிய பாதுகாப்புக்கான இராணுவம் என்பது 1983களுக்கு முன்னர் இருந்த இடங்களில் மாத்திரம் நிலைநிறுத்தப்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்களின் மத, கலாச்சார இடங்கள் தொல்பொருள் பிரதேசம் என அடையாளப்படுத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதும், அழிக்கப்படுவதும் உடன் நிறுத்தப்படல் வேண்டும்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படல் வேண்டும் என இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டிருந்தது.

அனைத்து தழிழ் அரசியல்  கட்சிகளும்  ஓரணியில் திரள வேண்டும்

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)