முறைகேட்டிற்கு எதிராக  கவனயீர்ப்புப் போராட்டம்

வவுனியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட மரக்காரம்பளை கிராம சேவகர் பிரிவில் பால் மா விநியோகத்தில் முறைக்கேடு இடம்பெற்றுள்ளதாக தெரிவித்து செவ்வாய்க்கிழமை (10) இப்பகுதி மக்கள் கவனயீர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

மரக்காரம்பளை கிராம சேவகர் அலுவலகம் அமைந்துள்ள மணிபுரம் கிராமத்தில் கிராம சேவகர் அலுவலகத்துக்கு முன் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மக்கள், அண்மையில் கிராம சேவகரால் பால்மா பைக்கெற்றுகள் வழங்கப்பட்டிருந்தன. இவை பக்க சார்பான முறையில் வழங்கப்பட்டதுடன் தகுதியற்றவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

துயர் பகிர்வோம்

பல குழந்தைகள் போசாக்கின்றியுள்ள நிலையில் கிராம சேவையாளர் பால் மாடுகளும், வாகனங்களும் வைத்துள்ளவர்களுக்கு பால்மா பைக்கெற்றுகள் வழங்கியுள்ளார். இது தொடர்பில் கிராம சேவகரிடம் கேட்டால் பொறுப்பற்ற விதத்தில் பதில் கூறுகின்றார் என தெரிவித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் பிரதேச செயலாளரிடம் கேட்டபோது, வவுனியா பிரதேச செயலர் பிரிவில் 36, 000 குடும்பங்கள் உள்ளன. இதில் 6,000 குடும்பங்கள் மிக வறுமைக்கோட்டுக்குட்பட்ட குடும்பங்களாக உள்ளன.

இந் நிலையில் எமக்கு 1730 குடும்பங்களுக்கு வழங்குவதற்குத்தான் பால்மா பொதி கிடைத்தது. இதில் வறுமையான குடும்பங்களுக்கு வழங்குமாறு கிராம சேவையாளர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளோம்.

இதில் முறைப்பாடு தெரிவிப்பவர்கள் உண்மையிலேயே வறுமையானவர்களாயின் அதைப்பற்றி தற்போது கூறமுடியாது. அவர்கள் என்னிடம் முறைப்பாட்டை தந்தால் அவர்கள் தகுதியானவர்களாக இருந்தும் கிடைக்காவிட்டாலும் தகுதியற்றவர்களுக்கு கிடைத்தாலும் நடவடிக்கை எடுப்போம் என்றார்.

முறைகேட்டிற்கு எதிராக  கவனயீர்ப்புப் போராட்டம்

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)