
posted 26th January 2023
சந்தை வீதிக்கு வந்தால் சட்டம் பாயும்
காரைநகர் பிரதேச சபை எல்லைக்குள் சட்டவிரோதமான முறையில் சந்தை கூடினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்(26) காரைநகர் பகுதியில் உள்ள வீதியில் சந்தை கூடியமை தொடர்பில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நாங்கள் காரைநகர் – சக்கலாவோடடையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் உள்ளூர் உற்பத்திகளை விற்பனை செய்வதற்கான சந்தை தொகுதி ஒன்றை திறந்து வைத்துள்ளோம்.
இதற்கு முன்னர் தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை ஒப்பந்த அடிப்படையில் குத்தகைக்கு எடுத்து அந்த
சந்தையில் காணியை அமைத்திருந்தோம். ஆனால், தற்போது எமக்கான ஒரு சந்தை கட்டடத் தொகுதியை நாங்கள் திறந்துள்ளோம். ஆகையால் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தங்கள் உற்பத்திகளை சக்கலாவோடை சந்தையில் சந்தைப்படுத்தலாம்.
நாங்கள் குத்தகைக்கு எடுத்த தனியாரின் காணியை உரிமையாளரிடம் ஒப்படைக்கவுள்ளோம். எனவே, இனிமேல் அங்கு யாரும் சந்தை கூட முடியாது. அவ்வாறு கூடினால் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அத்துடன், வீதிகளில் சட்டவிரோதமாக கூடும் சந்தைகள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள்.
எனவே, காரைநகர் பகுதி வியாபாரிகள் இனிமேல் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)
முசலி பிரதேச சபையின் வாக்காளர்கள்
முசலி பிரதேச சபை எல்லைக்குள் 13738 வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
( வாஸ் கூஞ்ஞ) 26.01.2023
நடைபெற இருக்கும் 2023 ஆம் ஆண்டுக்கான உள்ளுர் அதிகார சபைகளுக்கான தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் ஒரு நகர சபைக்கும் நான்கு பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற இருக்கின்றது.
இதில் முசலி பிரதேச சபை எல்லைக்குள் 10 வட்டாரங்களில் 2022 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பிற்கு அமைய 13738 வாக்காளர்கள் வாக்களிக்க பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
- அரிப்பு மேற்கு வட்டாரத்தில் 920 வாக்காளர்களும்
- அரிப்பு கிழக்கு வட்டாரத்தில் 588 வாக்காளர்களும்
- பண்டாரவெளி வட்டாரத்தில் 1235 வாக்காளர்களும்
- புதுவெளி வட்டாரத்தில் 670 வாக்காளர்களும்
- சிலாவத்துறை வட்டாரத்தில் 1802 வாக்காளர்களும்
- அகத்திஆறிப்பு மற்றும் கூளாங்குளம் வட்டாரங்களில் 1896 வாக்காளர்களும்
- பொற்கேணி வட்டாரத்தில் 1333 வாக்காளர்களும்
- மருதமடு மற்றும் வேப்பங்குளம் வட்டாரங்களில் 1982 வாக்காளர்களும்
- கொண்டச்சி வட்டாரத்தில் 1678 வாக்காளர்களும்
- பாலைக்குழி வட்டாரத்தில் 1634 வாக்காளர்களும்
மொத்தமாக 13738 வாக்காளர்கள் வாக்களிக்க இருக்கின்றனர்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)