
posted 19th January 2023
நாட்டின் பொருளாதாரம் மிகவும் மோசமாக உள்ளது. இதனால் தேர்தலை நிறுத்துவது சரி என்று தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் க. வி. விக்னேஸ்வரன் எம். பி. தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த தேர்தல் இடம்பெறுமா? இல்லையா? என்ற சந்தேகம் நாடு முழுவதும் பரவியிருக்கின்றது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த விக்னேஸ்வரன்,
தேர்தலை நிறுத்துவது சரி என்பது என்னுடைய கருத்து. இந்தத் தேர்தல் தேவையற்றது. நாட்டின் பொருளாதார நிலைமை மிக மோசமாக இருக்கின்றது.
இந்த நிலைமையில் ஒரு தேர்தல் நடந்தால் மக்களிடையே ஒவ்வொருவருக்கும் இடையில் முரண்பாடுகளும் தமது பதவிகளுக்காகப் பிரிந்துகொண்டு போகின்ற தன்மையும் இந்த நாட்டிலே தற்போது ஓரளவு நிலவும் சட்ட ஒழுங்கை கூட பாதித்துவிடும்.
அதை காட்டிலும் எத்தனையோ பில்லியன் ரூபாய் தேவையாக இருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் சீர்கெட்ட நிலைமையில் பணத்தை இதில் கொட்ட வேண்டிய அவசியமில்லை. மாகாண சபை தேர்தலை நடத்தினால் பரவாயில்லை. ஏனெனில், மாகாண சபை என்று கூறும் போது வட, கிழக்கு மாகாணங்களுக்கு கிட்டத்தட்ட நான்கு வருட காலங்களாக எந்தவித செயல்பாடுகளும் இல்லாமல் இருப்பதால் அது அவர்களுக்கு நல்லது.
இவ்வாறான ஒரு தேர்தல் இப்போது நடைபெற வேண்டுமா? என்ற கேள்வி எழுகின்றது. சிலவேளைகளில் அது நிறுத்தப்படக்கூடும். ஆனாலும் நாம் எமது கடமைகளை செய்ய வேண்டும். இந்த அடிப்படையில் எமது கடமைகளை செய்துகொண்டிருக்கின்றோம் என்றார்.