
posted 25th January 2023
அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் திறமைக்கு இடமளிக்கபடுவதில்லை என்பதாலேயே அக்கட்சியில் இருந்து வெளியேறி, ஐக்கிய காங்கிரஸில் இணைந்து கொண்டதாக கல்முனை மாநகர சபையின் முன்னாள் உறுப்பினரும் ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருமான மருதூர் ஏ.எல். அன்ஸார் தெரிவித்தார்.
ஐக்கிய காங்கிரசின் கல்முனை அலுவலகத்தில் கட்சியின் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தலைமையில் இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்;
சாய்ந்தமருது பிரதேசத்திற்கு நகர சபை உருவாக்கபடுவதற்கு ஐக்கிய காங்கிரஸ் கட்சி எந்த தடையும் இல்லை. இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபை மக்கள் ஒரு சிலரை விட எல்லோரும் தெளிவாக இருக்கின்றார்கள்.
கல்முனையில் எல்லைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட் வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். சாய்ந்தமருது மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறான விடயங்கள் தீர்க்கப்படுகின்ற போது கல்முனை மாநகரில் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ், முஸ்லிம் கட்சிகளின் தலைமைகள் இவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு முன்வர வேண்டும்.
நாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் அதிகார வர்க்கத்திடம் கெஞ்சியாவது மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைப்போம். அம்பாறை மாவட்டத்தில் பொருளாதார ரீதியான அபிவிருத்திகளை முன்னெடுப்பதுடன் சமூக உரிமை, இருப்பு சார்ந்த விடயங்களையும் இளைஞர்களின் வேலைவாய்ப்பினையும் முன்னெடுக்கவுள்ளோம் என்றார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)