
posted 30th January 2023
தொண்டைமானாறு சந்நிதியான் ஆச்சிரமம் மற்றும் சைவகலை பண்பாட்டு பேரவையின் 301 ஆவது ஞானச்சுடர் ஆன்மீக சஞ்சிகை வெளியீடும், துவிச்சக்கர வண்டி வழங்கல் நிகழ்வும் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) சந்நிதி வேற் பெருமானின் அபிஷேக பூசைகளுடன் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் இடம் பெற்றது.
இதில் முதல் நிகழ்வாக ஞானச்சுடர் 301வது இதழ் வெளியீட்டில் ஆசியுரைகளை வணக்கத்திற்க்கு உரிய சிவஶ்ரீ. சோ. தண்டபாணிக தேசிகர், பிரம்மஶ்ரீ ப. மனோகரக் குருக்கள் ஆகியோர் ஆற்றினர்.
அருளுரையினை - ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் ( 2 ஆவது குருமகா சந்நிதானம்) அவர்கள் ஆற்றினார். மதிப்பீட்டுரையினை ஆசிரியரான் ஆ. சிவநாதன் நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து சிறப்பு பிரதிகளாக தை மாத ஞானச்சுடர் வெளியீட்டுக்கு காத்திரமான பங்களிப்பு செய்யும் மக்கள் வங்கி சமூகத்தினருக்கு வழங்கப்பட்டதுடன், இதுவரை காலமும் வெளிவந்த ஞானச்சுடர் மாத வெளியீட்டில் வெளியீட்டுரை, மதிப்பீட்டுரை ஆற்றியோரும் கௌரவிக்கப்பட்டனர்.
கல்விச் செயற்றிட்ட உதவியாக - அல்வாய் கிழக்கு, அத்தாய் பிரதேசத்தை சேர்ந்த தரம் - 10 இல் கல்வி கற்கும் மாணவனுக்கும், புத்தூர் கிழக்கு, புத்தூரை சேர்ந்த உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவிக்கும், நீரவேலியை சேர்ந்த தரம் 5இல் கல்வி கற்கும் மாணவனுக்கும் துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட்டன.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)