
posted 11th September 2023
உறவுகளின் துயர் பகிர்வு
பிரிந்த உறவுகளின் துயர்பகிருங்கள்
இளைஞர் சக்தியால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை - கலாநிதி கோபால ரெத்தினம்!
“இளைஞர் தமது ஆற்றல், ஆளுமை, சக்தியுடன் செயற்பட்டால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை. விரக்தி மனப்பாங்குகளை வளர்த்து வெறுப்பான எண்ண அலைகள், சிந்தனைகளுக்குட்பட்டு, தகாத முடிவுகளுக்கும் செல்லக்கூடாது.”
இவ்வாறு கிழக்கு மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் கலாநிதி. லயன் எம். கோபாலரெத்தினம் கூறினார்.
உலக தற்கொலை எதிர்ப்பு தினத்தினை முன்னிட்டு கல்முனை நகர லயன்ஸ் கழகம் நடத்திய விழிப்புணர்வுக் கருத்தரங்கில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“நாளைய தொடுவானத்திற்கு வழி செலுத்துதல்” எனும் தலைப்பில் எதிர்காலத் தலைவர்களான இன்றைய இளைஞர், யுவதிகளை அறிவூட்டல் மற்றும் வலுவூட்டல் மூலம் சவால்களை முறியடிப்பதற்கு தயார்படுத்தும் நோக்குடன் இந்தக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
காரைதீவு அபிவிருத்தி மற்றும் திட்டமிடல் சமூகம், கனவு மெய்ப்படுகிறது ஆகிய அமைப்புக்களின் ஒத்துழைப்புடன் கல்முனை நகர லயன்ஸ் கழகம் கருத்தரங்கை சிறப்புற ஏற்பாடு செய்திருந்தது.
கல்முனை நகர லயன்ஸ் கழகத்தலைவர் எந்திரி. எம். சுதர்சன் தலைமையில், காரைதீவு கலாச்சார மண்டபத்தில் மேற்படி இலவச கருத்தரங்கு நடைபெற்றது.
தொழில் முனைவோர் மற்றும் உயர் கல்விக்காகக் காத்திருப்போருக்கென நடத்தப்பட்ட கருத்தரங்கில் பிரதம அதிதி கலாநிதி. கோபாலரெத்தினம் தொடர்ந்து உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
“தொழில்முனைவோர் மற்றும் உயர்கல்விக்காகக் காத்திருக்கும் இளைஞர், யுவதிகளுக்குப் பெரும்பயனாக பயனளிக்கத்தக்கதாவும் இன்றைய காலகட்டத்திற்குப் பொருத்தமானதுமான சிறந்த தலைப்புகளில் இந்த கருத்தரங்கை கல்முனை நகர லயன்ஸ் கழகம் ஏற்பாடு செய்தமை பாராட்டத்தக்கதாகும்.
எனினும் சேவை மனப்பாங்குடன் இலவசமாக ஏற்பாடு செய்யப்படும் பயனுள்ள இத்தகைய கருத்தரங்குகளில் பங்கு கொண்டு பயன்பெறுவதில் இன்றைய இளைஞர்களிடையே ஆர்வமின்மை காணப்படுவது வருந்தத்தக்கதாகும்.
குறிப்பாக நமது கிராமப் புறங்கள் சார்ந்த இளைஞர், யுவதிகள் வறுமையைக் காரணம் காட்டி எதிலும் ஆர்வமற்றும் சோர்வு நிலைக்கு உட்படுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
இத்தகைய இளையோரிடம் காணப்படும் ஆற்றல்கள், ஆளுமைகள், திறமைகள் பெரிதும் ஊக்குவிக்கப்பட வேண்டும்.
விடாமுயற்சியும், கடின உழைப்பும், ஆற்றலும் கொண்ட இளையோரால் சாதிக்க முடியாதது எதுவுமில்லை.
குறிப்பாக இளைஞர்கள் இன்றைய இக்கட்டான கால கட்டத்தில் அரச தொழிலை மட்டும் நம்பியிராது, சுய முயற்சியுடன் நிலையான தொழில்களில் ஈடுபட்டு, எதிர்காலத்தில் தொழிலதிபர்களாக மிளிரவும் முனையவேண்டும்.
நம்முன் பலர் இன்று நல்ல வருமானம் பெறும் தொழில் முயற்சியாளர்களாகத் திகழ்வதை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். வீண்விரக்தியுடனும், மனக்கிலேசங்களுடனும் நமது வாழ்க்கைப் பாதையை திசை திருப்பிவிடக்கூடாது” என்றார்.
ஊவாவெல்லஸ்ஸ பல்கலைக்கழக நூலகர் (பதில்) கலாநிதி துரையப்பா பிரதீபன், பதிவாளர் ஹிப்பதுல் கரீம், கனவு மெய்ப்படுகிறது அமைப்பின் தலைவரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான திருமதி நளினி டெட்ணராஜா, திறந்த பல்கலைக்கழக முன்னாள் உதவிப் பணிப்பாளர் திருமதி சரண்யாலவப்பிரதன் ஆகியோர் கருத்தரங்கில் வளவாளர்களாகக் கலந்து கொண்டதுடன்.
சாதனையாளர்களும் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)