சாய்ந்தமருதில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை முன்னெடுப்பதற்கான அமைப்பு உதயம்

சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை தன்னார்வத்துடன் முன்னெடுப்பதற்காக அமைப்பொன்று உருவாக்க்கப்பட்டுள்ளது.

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவை எனும் பெயரிலான இந்த அமைப்பின் அங்குராப்பணக் கூட்டம் சாய்ந்தமருது இளைஞர் சேவைகள் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.

சாய்ந்தமருது ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம் மௌலவி முன்னிலையில் சிவில் சமூக செயற்பாட்டாளர் எம்.எம்.உதுமாலெப்பை தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது சாய்ந்தமருது பிரதேசத்தில் ஜனாஸா நல்லடக்க விடயத்தில் மக்கள் எதிர்கொள்கின்ற அசௌகரியங்கள் மற்றும் கால தாமதங்களை நிவர்த்தி செய்வதற்காகவும் தேவையான உதவிகளை பெற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுங்கமைக்கப்பட்ட தன்னார்வ அமைப்பொன்றின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டதுடன் அதற்கான முன்னெடுப்புகள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

அமைப்பின் ஆரம்ப செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக உலமா சபைத் தலைவர் எம்.எம்.சலீம் மௌலவி தலைமையில் 23 பேர் கொண்ட தற்காலிக முகாமைத்துவ சபை ஒன்றும் தெரிவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் எம்.எம்.அஷ்ரப் மௌலவி, சாய்ந்தமருது வர்த்தகர் சங்கத் தலைவர் எம்.எம்.முபாறக், சிவில் சமூக செயற்பாட்டாளர்களான எம்.எம்.சாதாத், யூ.கே.காலிதீன், அஸ்வர் அப்துஸ் ஸலாம், மருதூர் அன்சார், எம்.எம்.முர்ஷித், எம்.எம்.அமீர், ஏ.ஜி.எம்.நிம்சாத் உள்ளிட்ட பலரும் கருத்துரை வழங்கினர்.

சாய்ந்தமருதில் ஜனாஸா நல்லடக்க சேவைகளை முன்னெடுப்பதற்கான அமைப்பு உதயம்

ஏ.எல்.எம்.சலீம்