'அரண்' சஞ்சிகை வெளியீட்டு விழா

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் 'அரண்' சஞ்சிகை வெளியீட்டு விழா நேற்று திங்கட்கிழமை (31) பணிமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஐ.எல்.எம். றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அத்துடன் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஏ.ஆர்.எம். தெளபீக் கெளரவ அதிதியாகவும், மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி. சுகுணன் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளரும் அரண் சஞ்சிகையின் பிரதம ஆசிரியருமான டொக்டர் எம்.பி.எம். வாஜித், சஞ்சிகை பற்றிய அறிமுகவுரையையும் அக்கரைப்பற்று மற்றும் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைகளின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஆஸாத் எம். ஹனிபா ஆய்வுரையையும் நிகழ்த்தினர்.

சஞ்சிகையின் முதற் பிரதி தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தருக்கு வழங்கி வைக்கப்பட்டதுடன் அவர் பொன்னாடை போர்த்தியும் கெளரவிக்கப்பட்டார்.

சஞ்சிகையின் இணை ஆசிரியர் பாஸித் முஹைதீன் ஏற்புரை மற்றும் நன்றியுரையை நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் பணிமனையின் பொறுப்பு வைத்திய அதிகாரிகள், பிரதேச வைத்திய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பலரும் பங்கேற்றிருந்தனர்.

'அரண்' சஞ்சிகை வெளியீட்டு விழா

ஏ.எல்.எம்.சலீம்