
posted 29th February 2024
பிரிந்த உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
பிரியாவிடை பெற்ற விரிவுரையாளர் ஜமால்தீன்
தென்கிழக்கு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் கணக்கியல் துறையின் முதன்மை விரிவுரையாளர்களில் ஒருவரான விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் கடந்த (19.02.2024) ஆம் திகதி தனது பல்கலைக்கழக ஆசிரிய சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
விரிவுரையாளர் ஏ. ஜமால்தீனுக்கு பிரியாவிடை வழங்கும் நிகழ்வு பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் ஏற்பாட்டில் கணக்கியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஏ. ஹலிம் தலைமையில் பணியாளர் மேம்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்களும் கௌரவ அதிதியாக வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எஸ்.சபீனா எம்.ஜி.எச். அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
அன்னவருக்கு பீடத்தின் கல்விசார் உத்தியோகத்தர்கள் முதல் கல்விசாரா உத்தியோகத்தர்கள் வரை பொன்னாடைகள் போர்த்தி ஞாபகச் சின்னங்கள் வழங்கி கௌரவித்தனர்.
விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் தனது ஆரம்பகால பல்கலைக்கழகச் சேவையை பல்கலைக்கழக கல்லூரியில் தொடங்கி, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆரம்ப உருவாக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டு, பின்னாளில் வர்த்தக முகாமைத்துவ பீடத்தில் நிரந்தர விரிவுரையாளராக 15.11.1996ஆந் திகதி முதல் தன்னை பல்கலைக்கழகச் சேவையில் இணைத்துக் கொண்டார்.
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் 27 வருடங்களுக்கு மேலாக தனது அளப்பெரிய விரிவுரையாளராகச் சிறப்பாகவும், வினைத்திறன் மிக்கதாகவும் மேற்கொண்டு பல்வேறுபட்ட மாணவச் செல்வங்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டிய ஒரு பெருந்தகை இவர்.
பல்கலைக்கழகத்தின் உருவாக்கத்தின் ஆரம்ப காலத்தில் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி இன்றைய எமது பல்கலைக்கழகத்தின் உயர்வு நிலைக்கு அர்ப்பணித்து பாடுபட்டவர்களில் பிரதானமானவர்களில் இவரும் ஒருவராவார்.
தனது சேவைக் காலத்தில் பல்வேறு பட்ட மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் சார்பான நிகழ்ச்சி திட்டங்களை பல்கலைக்கழகத்தில் முன்னெடுத்துச் சென்றவராக மட்டுமல்லாமல் குறிப்பாக பல்கலைக்கழகத்தின் தொழில்வள ஆலோசனை நிலையத்தின் பணிப்பாளராகவும், பணியாளர் மேம்பாட்டு நிலைய பணிப்பாளராகவும் திறம்பட கடமையாற்றியவர்.
தன்னிடம் கற்ற மாணவர்கள் இன்று சர்வதேச மற்றும் நாடளாவிய ரீதியில் பல்வேறுபட்ட உயர் பதவிகள் மற்றும் நிர்வாக துறைகளில் மேலோங்கி இருந்த போதிலும் ஏன் அதே பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என பல்வேறுபட்ட உயர் நிலையில் தங்களை நிலை நிறுத்திக் கொண்ட போதிலும் அவர்களைப் பார்த்து பெருமிதம் கொள்பவர் இவர். தான் பல்கலைக்கழகத்தில் சேவையாற்றிய காலம் வரையில் அனைத்து தரப்பினருடனும் அன்பாகவும், பண்பாகவும் பழகிக் கொண்ட இவர் மாணவர்களுக்கு நல்ல ஆசனாகவும், தன்னோடு கடமையாற்றிய சக உத்தியோகத்தர்களுக்கு ஆலோசனைகள் பல கூறக்கூடிய நல்ல நண்பனாகவும் மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் தனது கடமைகளை நிறைவேற்றியவர்.
சமூக ரீதியாக பல்வேறுபட்ட அபிவிருத்தித் திட்டங்களையும் குறிப்பாக நிந்தவூர் பிரதேசம்சார் வேலை திட்டங்கள் பலவற்றில் தன்னை அர்ப்பணித்து செயலாற்றியவர்.
இந் நிகழ்வின்போது விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் அவர்கள் தொடர்பில் அவருடன் இணைந்து பயணித்தவர்கள் தங்களது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தினர். நூலகர் எம்.எம். றிபாஉடீன், பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் உள்ளிட்டவர்களுடன் வர்த்தக முகாமைத்துவ பீடத்தின் பேராசிரியர்கள், சிரேஷ்ட, கனிஷ்ட விரிவுரையாளர்கள், பிரதி பதிவாளர் பி.எம். முபீன் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் ஜமால்தீன் அவர்களது குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இங்கு விரிவுரையாளர் ஏ. ஜமால்தீன் தொடர்பில் விவரணப்படம் ஒன்றும் காண்பிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)