
posted 12th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
பரந்துபட்ட கலந்துரையாடலுடனான இணைய பாதுகாப்பு சட்டமே தேவை
இலங்கைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டம் மீளப் பெறப்பட்டு, பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடலுடனான புதிய சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதே எமது விருப்பம் என யாழ். பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன் தெரிவித்துள்ளார்.
“இணையப் பாதுகாப்புச் சட்டம் – பிரயோகமும் விளைவுகளும்” எனும் தலைப்பிலான கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை (11) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் முறையற்ற தன்மையை கேள்விக்கு உட்படுத்துவதற்கான அரசமைப்பு ரீதியான வாய்ப்புகள் இலங்கை உயர் நீதிமன்றத்தினால் வழங்கப்படுமா என்பதை நாங்கள் பொறுத்திருந்து பார்க்க வேண்டி இருக்கிறது.
இதேநேரம், இணையத்தில் இடம்பெறக்கூடிய வன்முறைகளை கட்டுப்படுத்துவதற்காக அல்லது அதன் மூலம் பாதிக்கப்படுகின்ற மக்களை பாதுகாக்க வேண்டியதான ஒரு தேவைப்பாடு நிச்சயம் இலங்கையில் இருக்கின்றது. இந்த இணையம்சார் வன்முறைகள் கட்டுக்கடங்காமல் இடம்பெற்று வரும் சூழ்நிலையில் வன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கான ஒரு பிரத்தியேக சட்டத்தை நாங்கள் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது.
அதில் யாருக்கும் மாற்று கருத்து இருப்பதற்கான வாய்ப்பில்லை. ஆனால், இவ்வாறான முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சட்டத்தை உருவாக்குகின்ற போது பரந்துபட்ட மட்டத்தில் கலந்துரையாடல்களைச் செய்து, வெளிநாடுகளிலுள்ள நல்ல நடைமுறைகளை ஒப்பிட்டு ஆராய்ந்து சட்டத்தை நிதானமாகவும், தெளிவான தன்மையிலும் இலங்கையில் உருவாக்க வேண்டிய தேவை இருக்கின்றது என்றும் அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)