
posted 26th February 2024
உறவுகளின் துயரினைப் பகிருங்கள்
உறவுகளின் துயர் பகிர்வு
தேசிய அரசாங்கம் அமையும் சாத்தியம் இருந்தால், முஸ்லிம் காங்கிரஸும் ஒத்துழைக்கலாம்
தற்போதைக்கு நடைமுறைச் சாத்தியம் அற்றபோதிலும், ஆளும் கட்சியும் பாராளுமன்றத்தில் அதற்கு ஆதரவு வழங்கிவரும் கட்சிகளும், எதிர்க் கட்சிகளும் ஒன்றிணைந்து, சீரழிந்துபோயுள்ள நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக தேர்தல் நடக்கும் வரை தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான ஆக்கபூர்வமான முயற்சிகள் மேற்கொள்ளப்படுமானால், அதற்கு ஒத்துழைப்பு வழங்குவதுபற்றி பரிசீலிக்கலாம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அதே வேளையில், தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கண்டி, மடவளை பஸார் பிரதேசத்தில், தனியார் அமைப்பொன்றினால் நிர்மாணிக் கப்பட்டுள்ள 'எக்சன்' உள்ளக விளையாட்டரங்கின் திறப்பு விழாவில் அவர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தபோது, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பாக நடைபெறக்கூடிய சூழ்நிலையில் தாம் ஓர் அங்கமாக இருக்கும் ஐக்கிய மக்கள் சக்தி தனக்கான பெரும்பான்மையை சுவீகரித்துக் கொள்ளும் விதத்தில், பல முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிவருமென தெரிவித்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், எவ்வாறாயினும் தேர்தலுக்குப் பின் வெற்றியீட்டும் எல்லாக் கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைப்பதற்கான ஒரு முயற்சியை மேற்கொள்வதுதான் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய பொருளாதார, அரசியல் நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கு வழிகோலும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
யதார்த்தத்தில் இன்று காணப்படுகின்ற பாராளுமன்ற சமன்பாட்டை வைத்து தேசிய அரசாங்கமொன்றை அமைக்க முடியாது. அதாவது, இன்றுள்ள பாராளுமன்றத்தின் நிலைப்பாடு மக்களால் நிராகரிக்கப்பட்டதொரு சமன்பாடாகும் என்பதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். தேசிய அரசாங்கம் என்று மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களைப் பெரும்பான்மை கொண்ட ஓர் அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் மக்கள் ஒருபோதும் திருப்தியடையப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந் நிகழ்வில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினர் திலின பண்டார தென்னகோன், ஹிதாயத் சத்தார் ஆகியோர் உட்பட அநேகர் கலந்து கொண்டிருந்தனர்.

ஏ.எல்.எம். சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)