
posted 23rd February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
TRC எம் மக்களை ஏமாற்றுவதற்கான ஓர் கண்துடைப்பே ஆகும்
TRC எம் மக்களை ஏமாற்றுவதற்கான ஓர் கண்துடைப்பே ஆகும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் பாராளுமன்றத்தில் கூறினார். இது தொடர்பாக அவர் பாராளுமன்றத்தில் மேலும் உரையாற்றுகையில் பின்வருமாறு கூறினார்.
இந்த நாட்டைப் பொறுத்தளவில் தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய சில சட்ட மூலங்களை பாராளுமன்றத்தில் கொண்டு வந்ததுடன் சிலவற்றை மாற்றுவதற்க்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கின்றது. ஆனால், வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் எதிர்பார்ப்பை முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்க்கவோ, பூர்த்தி செய்யும் எந்த ஒரு நடவடிக்கை தொடர்பான கொள்கையோ திட்டமிடலோ அரசிடம் இல்லை. ஓர் கண்துடைப்பாகவே இந்த உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு TRC - Truth, Unity and Reconciliation Commission. உண்மைக்கும், ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழுவினை அரசு சர்வதேசத்தை மகிழ்விக்கக் கொண்டுவரும் ஓர் திட்டமே. எம் மக்கள், வட - கிழக்கு காணமல் அக்கப்பட்டோர் சங்கம் மற்றும் சிவில் சங்கம் இதனை நிராகரித்துள்ளார்கள். தாம் தமிழ் மக்கள் சார்பாக பல திட்டங்களை முன்னெடுக்கின்றோம் என்பதனை காட்டும் ஓர் கண்துடைப்பே இதுவாகும். எமக்கான அதிகாரப் பரவலாக்கல் பற்றியோ, அரசியல் அதிகாரம் பற்றியோ, எமக்கான தீர்வு பற்றியோ எவ்வித முன்னேற்றமான நடவடிக்கையும் இல்லை.
இவ் TRC மூலம் கொல்லப்பட்ட மற்றும் காணமல் ஆக்கப்பட்ட எம் மக்களுக்கான நீதி கிடைப்பதற்க்கான எவ்வித வாய்ப்பும் இல்லை.
நான் ஜனாதிபதியின் ஓர் உரையைப் பார்த்தேன். அதில் அவர் வரும் கௌரவ ஜனாதிபதித் தேர்தலைக் குறி வைத்ததாக தமிழ் மக்களை சமரசம் செய்யும் முயற்சி போல் இருந்தது. தேர்தலுக்கு முன் எம் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பது போல் கூறியிருந்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில் திருகோணமலை குச்சவெளிப் பிரதேசத்தில் கட்டப்படும் விகாரைகள் மிகவும் முக்கிய தேவையான விகாரைகள் என்று பேசப்பட்டுள்ளது. எமது வட கிழக்கு பிரச்சினைகளை விட இந் நான்கு விகாரைகளின் முக்கியத்துவம் தான் ஜனாதிபதி செயலகத்தில் பேசப்படுகின்றது. இவரா எம் பிரச்சனைகளை தீர்க்கப்போகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் தொல்பொருள் பிரச்ச்னைகளில் முக்கியமாக குடும்பிமலைக்கு அருகாமையில் புதிய விகாரை அமைக்கும் திட்டம் இடம்பெறுகின்றது. அதற்கான 800 மீட்டர் நீளமான பாதையும் அமைக்கப்படுகின்றது. அவ் இடத்தில் எவ்வித குடியேற்றமும் இல்லை. ஆனால், எமக்கான முக்கிய வீதிகளை மற்றும் திட்டங்களை அமுல்படுத்த வினவும் போது நிதியில்லை என்பார்கள். எம் மக்களின் வரிப்பணம் இவ்வாறாக வீணடிக்கப்படுகின்றது. எமது வரிப் பணத்தை பெற்று எமக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள்.
ஜனாதிபதி உடனான சந்திப்பில் இராணுவ முகாம்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக கூறுகின்றார். ஆனால், இங்கு வந்தால் எமது மாவட்ட இராஜங்க அமைச்சர் அதற்கு மாறாக அதற்கான இணக்கமில்லை என்று சொல்கின்றார். குருக்கள் மடம் மற்றும் முறக்கொட்டான்சேனை போன்ற இராணுவ முகாம்கள் இவ்வாறு விடுவிக்க முடியாமல் உள்ளது.
ஆக்குறைந்தது எமது முக்கிய வாழ்வாதாரங்களில் ஒன்றான விவசாயம் போன்றவற்றிற்கான திட்டமிடலில் கூட அரசாங்கம் தவறி இருக்கிறது. பெரும்போக நெல் கொள்வனவில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகின்றது. அரசு நிலக் கடலைகளை இறக்குமதி செய்வதால் உள்ளூர் நிலக்கடலை உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுகின்றார்கள். அவர்களால் தங்கள் உற்பத்தியை விற்க முடியாமல் உள்ளது. யானை வேலி அமைப்பதில் கூட பிரச்சினைகள் காணப்படுகின்றது. நாம் நேரடியாகச் சென்று தலையிட்டு தீர்க்க வேண்டியுள்ளது.
ஆனால், ஜனாதிபதி, ஜனாதிபதித் தேர்தலைக் குறிவைத்து தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் ஏமாற்ற முயற்சி எடுக்கின்றார். ஆனால், இவர் எமக்கான தீர்வுகளுக்கான ஆரம்ப நடவடிக்கைகளை எடுக்காதுவிடின் இவரது இவ்வாறான செயல்பாடுகள் மூலம் மக்கள் இவருக்கான சரியான படிப்பினையை மேற்கொள்வார்கள் எனக் கூறினார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)