
posted 1st February 2024
துயர்பகிருங்கள்
துயர் பகிர்வு
18 இந்திய மீனவர்கள் விடுதலை
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 18 இந்திய மீனவர்கள் நேற்று (01) புதன்கிழமை மன்னார் நீதி மன்றத்தினால் நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் மீது மன்னார் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தினால் மன்றில் 3 குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டமை, இலங்கை கடற்பரப்பில் கடற்தொழிலில் ஈடுபட்டமை மற்றும் இலங்கையில் தடை செய்யப்பட்ட இழுவை மடித் தொழில் முன்னெடுத்தமை ஆகிய மூன்று குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டன.
குறித்த குற்றச்சாட்டுக்களை விசாரணைக்கு உட்படுத்திய நீதவான் 1ஆம் மற்றும் 2ஆம் குற்றச்சாட்டுகளுக்கு 12 மாதங்களும், 3ஆவது குற்றச்சாட்டுக்கு 6 மாதங்களுக்கு விதிக்கப்பட்டு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை வழங்கப்பட்டு இவர்களை நிபந்தனையின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டனர்.
மேலும், படகிற்கு குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப் படவுள்ளது.
இதன்போது அன்றைய தினம் படகின் உரிமையாளர் மன்றில் முன்னிலையாகுமாறு மன்று கட்டளை பிறப்பித்துள்ளது.
விடுதலை செய்யப்பட்ட 18 இந்திய மீனவர்களும் இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஊடாக மிரிஹான நிலையத்துக்கு அனுப்பப்பட்டு நாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)