
posted 19th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
நிந்தவூர் விவசாய அமைப்புகளுக்கு பாராட்டு
“அம்பாறை மாவட்டத்தில் பெரும் பிரச்சினையாக இருந்துவரும் யானைகளின் தொல்லையை கட்டுப்படுத்துவதற்கு பெரும் நிதி தேவைப்படும் இன்றைய காலகட்டத்தில் தாமாக முன்வந்து நிந்தவூர் பிரதேச விவசாய அமைப்புக்கள் தமது நெற்காணிகளை பாதுகாப்பதற்கு சொந்த நிதியைத் திரட்டி யானைவேலி அமைத்துள்ளமை நாட்டுக்கு செய்த பெரும் சேவையாகும். நிந்தவூர் பிரதேச செயலாளர் மற்றும் விவசாய அமைப்புக்களை நாம் பெரிதும் பாராட்டக் கடமைப்பட்டுள்ளோம்.” இவ்வாறு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத்தலைவருமான எஸ்.எம்.எம்.முஸாரப் கூறினார்.
நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் பிரதேச செயலக மண்டபத்தில் நடைபெற்றபோது அவர் இவ்வாறு புகழாரம் சூட்டி உரையாற்றினார்.
“அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஐந்நூறு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது....."
நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம். அப்துல் லதீபின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இந்த ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தலைமை தாங்கி மேலும் உரையாற்றுகையில், “அண்மையில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஐந்நூறு கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நெற்காணிகள், விவசாய உட்கட்டமைப்பு வசதிகள் பாதைகள் என்பன மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன இந்த இழப்பை எப்படி ஈடுசெய்வதென நாம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். இது விடயமாக ஜனாதிபதியிடம் நாம் முறையீடு செய்துள்ளதுடன் சேத விபரங்களை திரட்டும் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன” என்றார்.
மேலும், இக் கூட்டத்தில் நிந்தவூர் பிரதேச அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் குறைபாடுகள் தேவைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு முடிவுகளும் எடுக்கப்பட்டன.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)