
posted 11th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
தமிழர் பிரச்சினைகளுக்குத் தீர்வின்றி ஒன்றிணைவதை சிந்திக்க முடியாது
தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வாறு முன்னேற்றமடைய முடியும்? பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் முன்வர வேண்டும். எமக்கான தீர்வு கிடைத்தால் தான் ஒன்றிணைந்து செயல்பட முடியும், என்று இலங்கை தமிழ் அரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் தெரிவித்தார்.
நாட்டின் முதல் பிரஜையான ஜனாதிபதியால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடன உரையில் அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு குறிப்பிடப்படவில்லை. குறிப்பாக எட்டு தசாப்தமாக இந்த நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ஏதும் பேசாமல் இருந்தமை தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. குறிப்பாக சமாதானத்தின் கதவுகள் இலங்கையில் மிக இறுக்கமாக மூடப்பட்டுள்ளன.
நாட்டில் புரைபோடிப் போயுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு அரசத் தலைவர்கள் இதய சுத்தியுடன் செயல்படவில்லை என்பதனைக் காலம் உணர்த்தியுள்ளது. குறிப்பாக யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் யுத்த வெற்றி அமோகமாக கொண்டாடப்பட்டது. அறகலய போராட்டத்துக்கு பின்னர்தான் இந்த நாடு அடிமட்ட பொருளாதார நிலையில் உள்ளது என்பதை சிங்களவர்கள் புரிந்து கொண்டுள்ளார்கள்.
நாட்டை விட்டுச் செல்வதற்குதான் இன்று இலங்கையர்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள். மக்களின் மனங்கள் வெறுப்படைந்துள்ளன. நாட்டின் தலைவர்கள் சரியாகச் செயல்படவில்லை. அடுத்த தலைமுறையினருக்கு நம்பிக்கை வழங்கும் வகையில் அரசத் தலைவர்கள் பொறுப்புடன் செயல்படவில்லை. யுத்தத்தைக் காரணம் காட்டி ஆயுதம் கொள்வனவு செய்வதற்கும் இராணுவத்தை பலப்படுத்தவும் கடன் பெறப்பட்டது. அதன் விளைவு இன்று தாக்கம் செலுத்தியுள்ளது. அதனைப் பொருளாதாரப் பாதிப்பு என்று குறிப்பிடப்படுகிறது. ஆனால், பௌத்த விகாரைகள் அமைப்பதற்கும், தமிழர்களின் காணிகளை அபகரிப்பதற்கும் மாத்திரம் நிதி ஒதுக்கப்படுகிறது.
தமிழ் தேசிய இனத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் எவ்வாறு முன்னேற்றமடைய முடியும்? பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு சிங்கள தலைவர்கள் முன்வர வேண்டும். எமக்கான தீர்வு கிடைத்தால் தான் ஒன்றிணைந்து செயல்பட முடியும். தமிழர்களின் அரசியல் அபிலாசைகளுக்கு தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்கினால் பொருளாதாரம் முன்னேற்றமடையும். அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

எஸ் தில்லைநாதன் (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)