
posted 16th February 2024
துயரினைப் பகிருங்கள்
துயர் பகிர்வு
சர்ச்சைக்குரிய ஆசிரியர் இடமாற்றத்தை மாவட்டத்தினுள் முன்னெடுக்கத் தீர்மானம்
அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் வெளி மாவட்டங்களுக்கான இடமாற்றங்களை இரத்து செய்து, அவர்களுக்கான இடமாற்றங்களை இம்மாவட்டத்திற்குள்ளேயே மேற்கொள்வது என அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பங்கேற்புடன் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ஆசிரியர் இடமாற்றம் காரணமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அம்பாறை மாவட்ட ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பிலும் இக்கூட்டத்தில் கூடிய கவனம் செலுத்தப்பட்டு, ஆராயப்பட்டது.
அம்பாறை மாவட்டத்தில் ஆசிரியர் வெற்றிடங்கள் அதிகம் காணப்படுகின்ற நிலையில், மாவட்டத்திற்கு வெளியே ஆசிரியர்கள் இடமாற்றப்படுவதை இரத்து செய்து விட்டு, அவர்களை மாவட்டத்திற்குட்பட்ட வலயங்களுக்குள் இடமாற்ற வேண்டும் என்று மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், எச்.எம்.எம்.ஹரீஸ், எஸ்.எம்.எம். முஷாரப் ஆகியோர் வலியுறுத்தினர்.
இதனை ஆமோதித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகளின் கருத்துகளையும் கேட்டறிந்து கொண்டார்.
இதன்படி சம்மந்தப்பட்ட ஆசிரியர்களை மாவட்டத்தினுள் உள்ளக இடமாற்றம் செய்து வெற்றிடங்களை நிரப்புவது என்று தீர்மானிக்கப்பட்டது.
இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய ஆளுநர் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அதாஉல்லா நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

ஏ.எல்.எம்.சலீம் (தேனாரம் செய்தியாளர், கிழக்கு மாகாணம்)