
posted 27th February 2023
உறவுகளின் துயர்பகிர [Prices VAT included] - Special Offer
உன் தாய்மொழி மதிக்கப்படவில்லையென்றால் உன் குரல்கள் நெறிக்கப்படுகின்றது. மொழியை நாம் மதிக்கவில்லையென்றால் அந்த மொழியை பேசுகின்றவர்களை நாம் மதிக்கவில்லை என்றாகும். ஆகவே கலைஞர்களாகிய உங்கள் படைப்புக்கள் மேலும் தொடர வேண்டும் என பேசாலை பங்குத் தந்தையும் மன்னார் பிரஜைகள் குழுத் தலைவருமான அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.
சங்கவி பிலிம்ஸ் மற்றும் சங்கவி தியேட்டர் பிரைவேட் லிமிட்டட் தலைவர் கலாநிதி துரைராசா சுரேஸ் அவர்களின் ஏற்பாட்டில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய கலாவிபூஷணம் உலகத் தமிழர் விருது வழங்கும் விழா சனிக்கிழமை (25) பேசாலையில் இடம்பெற்றபோது அருட்பணி ஏ. ஞானப்பிரகாசம் அடிகளார் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தொடர்ந்து தனது உரையில்;
'தோன்றின் புகழோடு தோன்றுக. அன்றேல் தோன்றினும் தோன்றாமை நன்று' என வள்ளுவரின் வாக்கிற்கு அமைவாக வாழ்வோரை வாழ்த்துகின்ற என்ற இந்த நிகழ்வை சங்கவி தியேட்டர் லிமிட்டட் நான்காவது தடவையாக நடாத்துவதில் மகிழ்ச்சி அடைவது மட்டுமல்ல இவ்விழாவின் தலைவர் திரு சுரேஸ் தமிழுக்கு செய்கின்ற சேவையையிட்டு நான் அவரை வாழ்த்தி நிற்கின்றேன்.
தமிழ்நாயகம் அடிகளார் தமிழை உலகிற்கு எடுத்துச் செல்லும்போது இவ்வாறு கூறுவார். என்னை படைத்தனன் தானே தமிழ் செய்யுமாறு. இந்த விருது வாக்குக்கு அமையவே அவர் உலகத்தில் தமிழ் தூதுவராக திகழ்ந்தார்.
இந்த தமிழை நினைக்கின்றபோது இதைப்பற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் துடிப்பு இருக்கின்றது. பற்றற்ற உலகம் சார்ந்த உணர்வுகளை ஒன்றுசேர்க்கின்ற மொழியை நாம் பற்றிக் கொள்ளுகின்றபோது இந்த உலகத்தின் அனைத்து பற்றுக்களும் எங்களைவிட்டு அகன்று போகின்றது.
இந்த வகையில் இங்கு விருதுகள் பெற வந்திருக்கும் களைஞர்கள் எழுத்தாளர்களுக்கு நான் இதை கூறிவைப்பதில் பெருமை அடைகின்றேன்.
உன் தாய்மொழி மதிக்கப்படவில்லையென்றால் உன் குரல்கள் நெறிக்கப்படுகின்றது. மொழியை நாம் மதிக்கவில்லையென்றால் அந்த மொழியை பேசுகின்றவர்களை நாம் மதிக்கவில்லை என்றாகும்.
ஆகவே எமக்கு மொழி ஒர் உயிர். ஆகவே மொழியை நாம் வளர்த்தெடுப்பது மிகவும் முக்கியமானதாகும். உலகத்தில் ஏழு அதிசயங்கள் உண்டு என்பார்கள். ஆனால் எனக்கு ஒரேயொரு அதிசயம் மட்டுமே அது தமிழ் மொழி மட்டுமே.
எமது மொழி ஒரு அழகான மொழி. இதை நீங்கள் புத்தகமாக கலையாக வடிவமைக்காவிடில் சரித்திரம் மௌனமாகிவிடும். இலக்கியம் ஊமையாகிவிடும்.
மன்னார் தமிழுக்குரிய பகுதி இந்த இடத்தில் இவ் விழாவை எடுப்பது சாலச் சிறந்தாக அமைகின்றது. மன்னார் விரும்பப்படுவதில்லை. ஆனால் மன்னாருக்கு யாராவது வந்தால் இவ்விடத்தை விட்டுச் செல்ல விரும்புவதில்லை.
திருக்குறலில் இரண்டு மரங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஒன்று பனை மற்றையது மூங்கில். இந்த பனை மரங்கள் காட்சி அளிக்கும் இந்த இடத்தில் நான்காவது தேசிய கலாவிபூஷணம் உலக தமிழ் விருது வழங்கும் விழா நடப்பது சாலச் சிறந்ததாகும்.
வள்ளுவன் பனை மரத்தை சொல்லுவதின் மூலம் தமிழர்களின் கலாச்சாரத்தை எடுத்துக் கூறியுள்ளார். கலைஞர்களாகிய உங்கள் மூலம் தமிழ் வளர்ச்சி அடைய வேண்டும்.
இலக்கியத்தின் ஊடாக இந்த இனம் தொடர்ந்து வளர்ச்சி அடைய வேண்டும். செய்ய முடிந்தவன் சாதிக்கின்றான் செய்ய முடியாதவன் போதிக்கின்றான். ஏன கூறுவார்கள்.
ஆகவே இந்த இடத்தில் நீங்கள் ஒரு சாதனையாளர்களாக இருக்கின்றீர்கள். உங்கள் படைப்புக்கள் இன்னும் அதிகமாக வளர வேண்டும். அப்பொழுது எமது இனம் வாழும். இனம் வாழ்ந்தால் மனிதம் வாழும். இந்த மனிதத்துக்குள்தான் இறைவனை நாம் காண முடியும்.
ஆகவே நீங்கள் தமிழுக்கு செய்கின்ற சேவை இறைவனுக்கு செய்கின்ற சேவை என வாழ்த்தி நிற்கின்றேன் என இவ்வாறு தெரிவித்தார்.

வாஸ் கூஞ்ஞ (தேனாரம் செய்தியாளர், வடமாகாணம்)